மாமனிதன் அப்துல் ரவூப் தியாகத்தை என்றென்றும் நினைவு கூறுவோம்-சீமான்
சென்னை: மாமனிதன் அப்துல் ரவூப் தியாகத்தை என்றென்றும் நினைவு கூறுவோம், அவரது வழி நடப்போம் என்று நாம் தமிழர் இயக்கத் தலைவர் சீமான் கூறியுள்ளார்.
இது குறித்து சீமான் இன்று விடுத்துள்ள அறிக்கை:
ஈழத் தமிழர்களுக்காக தமிழ்நாட்டில் முதன் முதலாக தன்னைத் தானே எரியூட்டிக் கொண்ட மாமனிதன் அப்துல் ரவூப் அவர்களின் 15 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று.
தன் 24 ஆம் வயதில், தன்னையொத்த தமிழ்ச் சொந்தங்கள் ஈழத்தில் இன உரிமைக்காக உயிரைத் துறந்து போராடிக் கொண்டிருக்கையில் அதே உணர்வோடு தன் இன்னுயிரை தீக்குளித்துப் போக்கிய வீரம் செறிந்த நாள் இது. அன்று எந்த நோக்கத்திற்காக அப்துல் ரவூப் தன் இன்னுயிரைப் போக்கினாரோ அதே நோக்கம் இன்று மேலும் மேலும் வலுப்பட்டிருக்கிறது. அன்று அப்துல் ரவூப் உயிர் துறந்த பொழுது தமிழ்நாட்டில் இன எழுச்சி ஏற்பட்டிருந்தால் இன்று ஈழத்தில் இந்த மோசமான நிலை ஏற்பட்டிருக்காது.
அன்று அப்துல் ரவூப் உயிர் துறக்கும் முன், 'ஈழ மக்களின் துயரம் விரைவில் தீர்க்கப்படாவிட்டால் ஆயிரமாயிரம் அப்துல் ரவூப்கள் எழுவார்கள்' என்று கூறினார். இன்று அவரது கூற்றுப்படி தமிழ்நாட்டிலும் ஈழத்திலும் பல்லாயிரம் முத்துக்குமார்கள் தோன்றி உள்ளார்கள். இந்த நாளில் நாம் எடுத்துக் கொள்ள வேண்டிய உறுதிமொழி என்னவென்றால் அப்துல் ரவூப் போன்ற மறத்தமிழர்கள் மேற்கொண்ட லட்சியத்தை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வோம்.
அதே சமயத்தில் இனியொரு அப்துல்ரவூப்பும் முத்துக்குமாரும் தோன்றாமல் இருப்பது,நமது கையில்தான் இருக்கிறது. தமிழர்களின் ஒற்றுமையும் ஒன்றுபட்ட போராட்டமும்தான் அந்த நிலையை உருவாக்கும். அவர்களின் தியாகங்கள் ஆண்டுக்கொருமுறை நினைவுகூருவதற்காக மட்டும் அல்ல. அது நம் இனம் விடுதலை பெறும் வரையில் நம் நெஞ்சிலே எரிந்து கொண்டிருக்க வேண்டும் என்பதைத் தெரிவித்துக்கொள்கின்றேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.
ஈழத் தமிழர் விரோத திமுக, காங்.-சீமான் சாடல்
இதற்கிடையே, புதுச்சேரி மாநிலம் வீராம்பட்டினம் கவுன்சிலர் சக்திவேல், காரைக்கால் மாவட்ட பா.ம.க. செயலாளர் தேவமணி, புதுவை பெரியார் திராடர் கழக தலைவர் லோகு அய்யப்பன் ஆகியோரை சிறைக்குச் சென்று பார்த்து நலம் விசாரித்தார் சீமான்.
இவர்களை புதுச்சேரி சி.ஐ.டி. போலீசார் கைது செய்து தேசிய பாதுகாப்பு சட்டத்தில் காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர். மூன்று பேரையும் பார்த்து விட்டு வெளியில் வந்த சீமான் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
புதுவையில் கவுன்சிலர் சக்திவேல், தேவமணி, லோகு அய்யப்பன் ஆகியோரை, திட்டமிட்டு பழிவாங்கும் நோக்கத்துடன் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் புதுவை அரசு கைது செய்து இருக்கிறது. தேசிய பாதுகாப்பு சட்டத்தை புதுவை அரசு தவறாக பயன்படுத்துகிறது.
சொந்த ஊரில் இலங்கை தமிழர்கள் வாழ முடியவில்லை. என்னை 2 தடவை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் தமிழக அரசு கைது செய்து இருக்கிறது.
நீதிமன்ற உத்தரவின் பேரில் வெளியே வந்து விட்டேன்.
தி.மு.க.- காங்கிரஸ் கட்சிகள் ஈழ தமிழர்கள் மீது விரோத போக்கை கடைபிடித்து வருகிறது. அடக்கி, ஒடுக்கி வைக்க அவர்கள் நினைக்கிறார்கள். இன்னும் 3 மாதத்தில் சட்டசபை தேர்தல் வர இருக்கிறது. அப்போது ஈழ தமிழர்கள் பிரச்சினைகளை முன்வைத்து பணியாற்றுவோம் என்றார் சீமான்.












Click it and Unblock the Notifications