மானாமதுரை அருகே சு.சாமி சிறப்பு யாகம்: கும்பகோணம் கணபதி சாஸ்திரி நடத்தினார்
சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே வேதியரேந்தல் விலக்கு, பஞ்சபூதேஸ்வரம் என்ற இடத்தில் பஞ்சமுக ப்ரத்தியங்கரா தேவி கோவில் சிறப்பு யாகத்தில் கலந்து கொண்டார் ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணிய சுவாமி.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே வேதியரேந்தல் விலக்கு, பஞ்சபூதேஸ்வரம் என்ற இடத்தில் பஞ்சமுக ப்ரத்தியங்கரா தேவி கோவில் உள்ளது. இந்த கோவில் கும்பகோணம் அய்யாவாடி ப்ரத்தியங்கரா தேவி கோவிலைப் போன்று சக்தி வாய்ந்தது.
கடந்த ஏழு வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்ட இந்த கோவிலில் சதசண்டியாகம், நிகும்பலா யாகம், புத்திர காமேஷ்டி யாகம், கஜபூஜை போன்ற பல முக்கிய யாகங்கள் நடைபெறும். ஒவ்வொரு மாத அமாவாசை அன்றும் மிளகாய், மிளகு ஆகியவற்றைக் கொண்டு சிறப்பு யாகம் நடத்தப்படும்.
மேலும், இந்த கோவிலுக்கு தமிழகம், மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் இருந்து பக்தர்கள் வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று காலை ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணியசாமி, பொதுச்செயலாளர் சந்திரலேகா ஆகியோர் காலை 7 மணி அளவில் இசட்பிளஸ் பாதுகாப்பு வீரர்கள் புடைசூழ ப்ரத்தியங்கரா தேவி கோவிலுக்கு சென்றனர். அவர்களை கோவில் காப்பாளர் ஞானசேகர சுவாமிகள் வரவேற்றார்.
இந்த சிறப்பு யாகத்தை கோவில் அருகே உள்ள யாகசாலை மண்டபத்தில் கும்பகோணத்தைச் சேர்ந்த கணபதி சுப்பிரமணியம் சாஸ்திரி நடத்தினார். இந்த யாகம் மற்றும் சிறப்பு பூஜையில் சுப்பிரமணிய சுவாமி மதியம் 12 மணி வரை கலந்து கொண்டார்.
கடந்த 1991-ம் ஆண்டு பொதுத் தேர்தலில் அ.தி.மு.க பொதுச் செயலாளர் ஜெயலலிதா வெற்றி பெற சிறப்பு யாகங்கள் செய்த கும்பகோணத்தைச் சேர்ந்த கணபதி சுப்பிரமணியம் சாஸ்திரி தான் தற்போது சுப்பிரமணிய சுவாமிக்கு யாகம் நடத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications