உ.பி.யில் பஞ்சாயத்து தலைவரானார் பிச்சைக்காரர்: மக்களின் கலக்கல் தேர்வு
பதாயு: நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அதைச் செய்வோம், இதைச் செய்வோம் என்று தேர்தல் நேரத்தில் வாக்குறுதிகளை அள்ளி வீசும் அரசியல்வாதிகளைப் பார்த்து பார்த்து சலித்துப் போய் விட்டதாலோ, என்னவோ, உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள சஹாவர் ஷா கிராம மக்கள் சற்று வித்தியாசமாக இருக்கட்டும் என்று ஒரு பிச்சைக்காரரை பஞ்சாயத்து தலைவராக்கி விட்டனர்.
சஹாவர் ஷா பஞ்சாயத்துத் தலைவர் பதவிக்கு மொத்தம் 8 பேர் போட்டியிட்டனர். ஆனால் பொதுமக்களோ 70 வயதாகும் நாராயண் நட் என்னும் பிச்சைக்காரரைத் தலைவராகத் தேந்தெடுத்துள்ளனர்.
நாராயணன் நட், கடந்த 40 ஆண்டுகளாக பிச்சை எடுத்து வரும் பழுத்த அனுபவசாலி ஆவார்.
தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட நட் அதுகுறித்துக் கூறுகையில், கிராமத் தலைவராவோம் என்று நான் கனவிலும் நினைத்ததில்லை என்று ஆச்சரியத்துடன் தெரிவித்தார். ஆனால் கிராம மக்களோ அவர் மீது முழு நம்பிக்கை வைத்துள்ளனர்.
தேர்தலில் வெற்றி பெற்ற பிறகும் கூட தனது தொழிலைக் கைவிடவில்லை நட். தொடர்ந்து பிச்சை எடுத்துக்கொண்டுதான் இருக்கிறார். தான் தொடர்ந்து பிச்சை தான் எடுக்கப் போவதாகவும், அரசாங்கப் பணத்தை கிராம வளர்ச்சிக்கு செலவிடப் போவதாகவும் அவர் கூறுகிறார்.
கடந்த மாதம் நடந்த தேர்தலில் வெற்றி பெற்ற பிறகும் நட் தெருவில் பிச்சை எடு்ப்பதை நிறுத்தவில்லை. நட் தனி மனிதர் அல்ல, அவருக்கு 4 மகன்களும், 14 பேரன்களும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications