பாஜக பற்றி பேச சோனியாவுக்குத் தான் தகுதி இல்லை-எதியூரப்பா கண்டனம்
பெங்களூர்: ஊழலைப் பற்றி பேச பாஜகவுக்கு தகுதி இல்லை என்று சோனியா கூறியதற்கு கர்நாடக முதல்வர் எதியூரப்பா கண்டனம் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நடந்த அமைச்சர்கள் கூட்டத்தில் சோனியா காந்தி ஊழலைப் பற்றி பேச பாஜகவுக்கு எந்த வித தகுதியும் இல்லை என்றார். மேலும், கர்நாடகாவில் நடந்த ஊழல்களை சுட்டிக் காட்டினார். இதை எதியூரப்பா வன்மையாக கண்டித்துள்ளார்.
அவர் சோனியாவுக்கு கொடுத்த பதில்:
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் பல்வேறு ஊழல்கள் நடந்திருக்கின்றன. முதலில் அவற்றை பார்த்துவிட்டு பிறகு மற்ற கட்சிகள் ஆளும் மாநிலங்களைக் குறை கூறட்டும்.
2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலுக்கு காங்கிரஸ் தான் முழுப் பொறுப்பு. இதை முதலில் கவனித்துவிட்டு பிற விவகாரங்களுக்குச் செல்லட்டும்.
ஸ்பெக்ட்ரம் ஊழல், காமன்வெல்த் விளையாட்டு ஊழல், ஆதர்ஷ் ஊழல் என காங்கிரஸ் கூட்டணி அரசில் எங்கு பார்த்தாலும் ஊழல். இது மட்டுமின்றி காங்கிரஸ் ஆளும் மாநிலங்களிலும் எத்தனையோ ஊழல்கள்.
இத்தனையையும் கவனிக்காமல் சோனியா மற்ற விவகாரங்களைப் பார்ப்பதில் அர்த்தமில்லை. பிறரைப் பற்றி கூற அவருக்குத் தான் தகுதி இல்லை என்று அவர் கூறினார்.