ஸ்பெக்ட்ரம் விவகாரம்: அடுத்த வாரம் கைது படலம்?

ஸ்பெக்ட்ரம் விவகாரம் குறித்து கடந்த ஆண்டே சி.பி.ஐ. வழக்குப் பதிவு செய்தது. ஆனால் உச்சநீதிமன்றம் அறிவுறுத்திய பிறகே இந்த விவகாரம் குறித்து சி.பி.ஐ. விசாரணை சூடு பிடித்தது.
ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் தொடர்புடைய முன்னாள் அமைச்சர் ராசா, அரசு அதிகாரிகள், நீரா ராடியா உள்ளிட்ட தரகர்கள், ஹவாலா பேர்வழிகள் உள்பட பலரது வீடுகளில் சி.பி.ஐ. இதுவரை 2 கட்ட சோதனை நடத்தியது. அந்த சோதனைகளில் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் முறைகேடுகள் நடந்திருப்பதற்கான ஆதாரங்கள் சிக்கின.
கம்ப்யூட்டர்கள், லேப்டாப்கள், பென்டிரைவ்களில் உள்ள ரகசிய தகவல்கள் பலரை சி.பி.ஐ.யிடம் சிக்க வைத்துள்ளது. அத்தகைய நபர்களிடம் சி.பி.ஐ. தற்போது விசாரணை நடத்தி வருகிறது.
இதற்கிடையே அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 10- ந்தேதிக்குள் விசாரணைகளை முடித்து சுப்ரீம் கோர்ட்டில் சி.பி.ஐ. அறிக்கை தாக்கல் செய்ய வேண்டியுள்ளது. எனவே ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் அடுத்தடுத்த நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டிய நிர்பந்தம் சி.பி.ஐ.க்கு ஏற்பட்டுள்ளது.
அதன்படி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் தொடர்புடைய சிலரை கைது செய்ய சி.பி.ஐ. திட்டமிட்டுள்ளது. இந்த நடவடிக்கைகள் இன்னும் ஓரிரு நாட்களில் தொடங்கும் என்று சி.பி.ஐ. வட்டாரத் தகவல்கள் தெரிவித்தன.












Click it and Unblock the Notifications