பெங்களூரில் 2 ரவுடிகள் என்கௌன்டரில் சுட்டுக் கொலை
பெங்களூர்: பல வழக்குகளில் தொடர்புடைய இரண்டு ரவுடிகளை நேற்று மத்திய குற்றப்பிரிவு போலீசார் என்கௌன்டரில் சுட்டுக் கொன்றனர்.
3 கொலை, 18 கொலை முயற்சி, வழிப்பறி வழக்குகளில் தொடர்புடைய பெத்த குண்டா (32) பெயிலில் வெளியே இருந்தான். அவனை நேற்று போலீசார் சுட்டுக் கொன்றனர்.
பின்னர் அன்மையில் நடந்த கற்பழிப்பு வழக்கு, கர்நாடகா மற்றும் தமிழ்நாடு போலீசாரால் கொலை முயற்சி, வழிப்பறி வழக்குகளுக்காக தேடப்பட்டு வந்த சங்கர் (30) என்பவனும் என்கௌன்டரில் கொல்லப்பட்டான்.
பெத்த குண்டா தாவரகரேயில் பதுங்கியிருப்பதாக மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதயைடுத்து உதவி கமிஷனர் எஸ். ஒய். ஹடிமணி தலைமையிலான போலீசார் கடந்த வெள்ளிக்கிழமை இரவு தாவிரிகரே சென்றனர். ஆனால் பெத்த குண்டா தப்பி ஓடிவிட்டான்.
பிறகு போலீசார் அவனை காமாட்சிபாளையாவில் கண்டுபிடித்தனர். அவன் இரண்டு சக்கர வாகனத்தில் அங்கிருந்து தனது கூட்டாளியுடன் தப்ப முயன்றான். போலீசார் அவனை பீன்யா இரண்டாவது ஸ்டேஜில் துரத்திப் பிடித்தனர். இதில் பெத்த குண்டாவின் கூட்டாளி தப்பிவிட்டான்.
உடனே அவன் போலீசாரை நோக்கி சுட்டதில் தலைமை கான்ஸ்டபிள் காயம் அடைந்தார். இதைத்தொடர்ந்து போலீசார் அவனை அதிகாலை 3. 15 மணி அளவில் சுட்டுக் கொன்றனர். அவன் பெயிலில் வெளியே வந்து மீண்டும் கொள்ளையில் ஈடுபட்டு வந்ததாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இரண்டாவது என்கௌன்டர் அதிகாலை 4. 30 மணி அளவில் ராமகிருஷ்ண ஹெக்டே நகரில் இருக்கும் ரேவா கல்லூரி அருகே நடந்தது. பாலே கௌடா, கே. எஸ். அசோகன் தலைமையிலான மத்திய குற்றப்பிரிவு போலீசார் சங்கரை சுற்றி வளைத்தனர். அவன் தாக்கியதில் சப்-இன்ஸ்பெக்டர் சிராஜுதீன் காயமடைந்தார். உடனே கௌடாவும், அசோகனும் அவனை சுட்டனர். இதில் படுகாயமடைந்த சங்கரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவன் வழியிலேயே இறந்து விட்டான்.
சங்கர் தமிழகத்தைச் சேர்ந்தவன். அன்மையில் டைடன் நிறுவன ஊழியையை கடத்தி, கற்பழித்துள்ளான். இதையடுத்து அவனை போலீசார் வலை வீசித் தேடி வந்தனர். இந்நிலையில் அவனை நேற்று பகலூர் சாலையில் பார்த்தபோது அவனை கைது செய்ய முயன்றனர்.
போலீசார் தற்காப்புக்காகவே அந்த இரண்டு பேரையும் சுட்டுக் கொன்றதாக உயர் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.