மியான்மர் விவகாரத்திலிருந்து விஜய் நம்பியாரை தூக்க இங்கிலாந்து கோரிக்கை
மியான்மர் ஜனநாயக இயக்கத்திற்கு எதிரானவர்களுக்கு ஆதரவாக விஜய் நம்பியார் செயல்படுவதாகவும் இங்கிலாந்து குற்றம் சாட்டியுள்ளது. ஏற்கனவே இந்த விஜய் நம்பியார், இலங்கை விவகாரத்திலும் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியதாக குற்றச்சாட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து ஐ.நா.வுக்கான இங்கிலாந்து தூதர் மார்க் லியால் கிரான்ட் கூறுகையில், மியான்மர் தூதராக விஜய் நம்பியார் தொடர்ந்து செயல்படக் கூடாது. மியான்மருக்கென தனி, நிரந்தர தூதரை ஐ.நா. நியமிக்க வேண்டும் என பான் கி மூனை நாங்கள் வலியுறுத்தியுள்ளோம்.
மியான்மரில் நடந்த தேர்தல் கண்துடைப்பு, மோசடிகளால் நிரம்பியது. மியான்மர் விவகாரம் தொடர்பாக நடந்த ஐ.நா கூட்டத்தில் இதை எடுத்துக் கூறினோம். அப்போது முக்கியமாக, விஜய் நம்பியாரை மாற்ற வேண்டும் என்பதையும் வலியுறுத்தினோம் என்றார்.
நம்பியார் சமீபத்தில் மியான்மருக்குச் சென்றார். ஆனால் அவரது வருகை உள்நோக்கத்துடன் கூடியதாக உள்ளதாக மியான்மர் ஜனநாயக கட்சிகள் சில குற்றம் சாட்டியுள்ளன. உண்மையான அமைதியை, ஜனநாயகத்தை ஏற்படுத்தும் வகையில் விஜய் நம்பியார் வந்ததாக தெரியவில்லை என்றும் அவை குற்றம் சாட்டியுள்ளன. மேலும், ஜனநாயகம் கோரி போராடி வரும் பல முக்கியத் தலைவர்களை சந்திப்பதில் விஜய் நம்பியார் ஆர்வம் காட்டவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.
மேலும், மியான்மர் ஜனநாயகத் தலைவி ஆங்சான் சூகியைக் குறித்தும் ஐ.நா. பொதுச் செயலாளரிடம் விஜய் நம்பியார் தவறான தகவலைக் கொடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆங்சான் சூகியி மிகுந்த பிடிவாதக்காரராக உள்ளார் என்பது விஜய் நம்பியார் தனது அறிக்கையில் பயன்படுத்தியுள்ள ஒரு வார்த்தையாகும்.
ஏற்கனவே இலங்கை விவகாரத்தில் விஜய் நம்பியாரைப் பயன்படுத்தியதால் பான் கி மூன் கண்டனத்துக்குள்ளானார். விஜய் நம்பியாரின் சகோதரரான சதீஷ் நம்பியார்தான், இலங்கை ராணுவத்தின் ராணுவ ஆலோசகராக செயல்பட்டு வந்தவர். இந்த நிலையில் விஜய் நம்பியாரை இலங்கையில் அமைதியை ஏற்படுத்தும் முயற்சியில் பான் கி மூன் ஈடுபடுத்தியது பெரும் சர்ச்சையைக் கிளப்பியது நினைவிருக்கலாம். இந்தநிலையில் தற்போது மியான்மரில் குழப்பத்தை அதிகரிக்கும் வேலையில் விஜய் நம்பியார் இறங்கியிருப்பதாக சர்ச்சை வெடித்துள்ளது.