முல்லைப் பெரியாறு அணை ஆய்வை திசை திருப்ப முயன்ற கேரள அதிகாரிகள்-நீதிபதி ஏ.எஸ்.ஆனந்த் கண்டிப்பு

முல்லைப் பெரியாறு அணையின் பலத்தை அறிய ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி ஏ.எஸ்.ஆனந்த் தலைமையிலான ஐவர் குழு நேற்று முல்லைப் பெரியாறு அணையில்,தமிழகப் பகுதியில் ஆய்வு மேற்கொண்டது. இதற்காக நீதிபதி ஆனந்த், தமிழகப்பிரதிநிதி லட்சுமணன், உறுப்பினர்கள் சி.கே.தத், மேத்தா மற்றும் அதிகாரிகள் சென்னையிலிருந்து மதுரை வந்தனர். பின்னர் அங்கிருந்து கார் மூலம் தேனி சென்றனர். மாலை 3 மணியளவில் தேக்கடி செல்லக் கிளம்பினர்.
அப்போது அங்கு வந்த கேரள நீர்ப்பாசன துறை செயலர் ஜெயக்குமார்,லோயர்கேம்ப்பில் உள்ள மின் உற்பத்தி நிலைய சுற்றுலா மாளிகையில் குழு உறுப்பினர் கே.டி.தாமஸ் தங்கியிருப்பதாகவும், அங்கு சென்றவுடன் குழுவினர் லோயர்கேம்ப் மின் உற்பத்தி நிலையம் மற்றும் கூடலூர் அருகே தமிழக அரசு புதிதாக கட்டி வரும் சிறிய மின் நீர் திட்டப்பணிகளையும் பார்வையிட வேண்டும் என்று குழுத்தலைவரான நீதிபதி ஆனந்திடம் கூறினார்.
இதைக் கேட்டதும் கோபமடைந்தார் நீதிபதி ஆனந்த். இந்த குழு ஏற்கனவே திட்டமிட்டபடி தேக்கடிக்கு சென்று முல்லைப்பெரியாறு அணையின் பலத்தை மட்டுமே ஆய்வு செய்யும். திட்டத்தில் இல்லாதவற்றையெல்லாம் கூறக் கூடாது என்று கண்டிப்புடன் ஜெயக்குமாரிடம் கூறினார்.
அதன் பின்னர் தேனியில் இருந்து லோயர்கேம்ப் சென்ற நீதிபதிகள் குழுவினர் அங்குள்ள சுற்றுலா மாளிகையில் ஏற்கனவே தங்கி இருந்த குழு உறுப்பினரான கே.டி.தாமசுடன் சிறிது நேரம் ஆலோசனை நடத்தினார்கள். அப்போது நீதிபதி கே.டி.தாமஸ் தான் இங்கு வந்தவுடன், லோயர்கேம்ப் மின் உற்பத்தி நிலையத்தை காண சென்றதாகவும், அதனை குழு பார்க்கலாமே என்று கேட்டார்.
அப்போதும் கண்டிப்பு கலந்த குரலில், நீதிபதி ஆனந்த் மறுப்பு தெரிவித்து திட்டமிட்டப்படி குழு அணையை மட்டும் பார்வையிட செல்லும் என்று கூறி விட்டார்.
இதனை அடுத்து அங்கிருந்து புறப்பட்ட போது, மீண்டும் நீதிபதி கே.டி.தாமஸ் தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள போர்பை அணையை பார்வையிட செல்லலாம் என்றார். இதனைக்கேட்ட தமிழக அரசின் சார்பில் நியமிக்கப்பட்ட குழு உறுப்பினரான நீதிபதி லட்சுமணன், ஏற்கனவே திட்டமிட்டபடி அணையின் பலம் குறித்த ஆய்வுக்கு மட்டுமே செல்ல வேண்டும், இல்லை என்றால் நான் என்னுடைய பயணத்தை இத்துடன் முடித்துக்கொள்கிறேன் என்று குழுத்தலைவரான நீதிபதி ஆனந்திடம் தெரிவித்தார்.
உடனே குழுத் தலைவரான நீதிபதி ஆனந்த், லட்சுமணனின் கருத்தை ஏற்று, வேறு எங்கும் இந்த குழு செல்லாது, அணைப்பகுதியை மட்டும் ஆய்வு செய்து விட்டு கொச்சிக்கு புறப்பட்டு செல்லும் என்று கூறிவிட்டு காரில் ஏறி வி்ட்டார்.இதையடுத்து குழுவினர் லோயர்கேம்ப்பில் இருந்து தேக்கடிக்கு புறப்பட்டு சென்றனர்.
பிரச்சினையைத் திசை திருப்பி, தேவையில்லாததைக் காட்டி குழப்பும் நோக்கத்தில் கேரளத் தரப்பு செயல்படுவதாக தமிழக அதிகாரிகள் கூறுகிறார்கள்.












Click it and Unblock the Notifications