Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு கொடுங்கள்-சாமி

Subscribe to Oneindia Tamil

Subramanian Swamy
திருநெல்வேலி: வரும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு கொடுங்கள் என்று ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணிய சாமி கூறினார்.

வாக்காளர் விழிப்புணர்வு இயக்கம் சார்பில் நடந்த ஸ்பெக்ட்ரம் ஊழல் விளக்க பொதுக் கூட்டத்தில் அவர் பேசுகையில், 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நாட்டுக்கு ரூ.1.76 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.

இதில் 35 சதவீத தொகையான சுமார் ரூ.60,000 கோடிக்கு ஊழல் நடந்துள்ளது.

தொலைத்தொடர்பு துறையில் முன் அனுபவம் இல்லாத பல நிறுவனங்களுக்கு ஸ்பெக்ட்ரம் ஒதுக்கி இந்த முறைகேட்டில் ஈடுபட்டுள்ளனர். ஸ்பெக்ட்ரம் அலைவரிசையை, மொபைல் போன் நிறுவனங்களுக்கு ஒதுக்கீடு செய்வதற்கு பதிலாக, ரியல் எஸ்டேட் நிறுவனங்களுக்கு ஒதுக்கீடு செய்தார்கள். ஸ்வான், யூனிடெக் போன்ற நிறுவனங்கள் அவற்றை வாங்கி, வெளிநாட்டு நிறுவனங்களுக்கு எட்டு மடங்கு அதிக லாபத்துக்கு விற்றுவிட்டன.

அந்த வெளிநாட்டு நிறுவனங்கள் தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பு கொண்டவை என உள்துறை அமைச்சக அறிக்கை கூறுகிறது. மேலும் அந்த வெளிநாட்டு நிறுவனங்களின் கைகளில் ஸ்பெக்ட்ரம் சென்றதால், நமது நாட்டின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி விட்டது.

ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டை பெற்ற நிறுவனங்கள், அதை 8 மடங்கு அதிக விலை வைத்து மற்ற நிறுவனங்களுக்கு விற்றுள்ளன.

பிரதமர் மன்மோகன் சிங்கின் அறிவுரையைக் கேட்காமல் இந்த ஊழலில் ஈடுபட்டுள்ளனர். பிரதமர் நேர்மையான மனிதர். அவர் எந்தக் குற்றமும் செய்யவில்லை. இந்த ஊழல் விவகாரத்தில், நான் மேலும் நெருக்கினால், மன்மோகன் சிங் பிரதமர் பதவியை ராஜினாமா செய்துவிடுவார். அவருக்கு பதிலாக வேறு ஒருவரை சோனியா பிரதமராக்கினால், அவர் நிச்சயம் இதைவிட மோசமானவராகத்தான் இருப்பார். மன்மோகன் சிங் நேர்மையானவர் தான் என்றாலும் இத்தகைய ஊழலை கண்டுகொள்ளாமல் இருப்பது தவறு.

ராசா செய்துள்ள ஊழலை மறைக்க அவர் தலித் என்பதால்தான் குற்றம் சாட்டப்படுவதாக கருணாநிதி கூறுகிறார். உத்தரப்பிரதேச மாநில முதல்வர் மாயாவதிக்கு மத்திய அரசு பல்வேறு தொந்தரவுகளைக் கொடுத்து வருகிறது. அந்த தலித் பெண்ணுக்கு ஆதரவாக கருணாநிதி குரல் கொடுக்கவில்லையே ஏன்?.

காங்கிரஸ் ஒழிந்தால்தான் ஊழல் ஒழியும். இந்த ஊழலை மறைக்கவும் மக்களை திசை திருப்பவுமே இந்து அமைப்புகளுக்கு தீவிரவாதிகளுடன் தொடர்பு இருப்பதாக ராகுல் காந்தி கூறியிருக்கிறார். அப்படி ஒரு தகவலை நாட்டின் எந்த ஒரு உளவுப் பிரிவும் கூறவில்லை. காங்கிரஸ் மட்டுமே இப்படிக் கூறி வருகிறது.

இந்த ஊழலை செய்தவர்களுக்கு தண்டனை வழங்க வேண்டுமென்றால் நீதிமன்றத்தில் விசாரணை நடத்தப்பட வேண்டும். அதற்குத் தேவையான எல்லா ஆவணங்களும் தயாராக உள்ளன. ஊழலை ஒழிக்கப் போதுமான சட்டங்கள் உள்ளன. அதை செயல்படுத்ததான் யாருக்கும் தைரியம் இல்லை.

வரும் ஜனவரி 1ம் தேதிக்குள் ஸ்பெக்ட்ரம் லைசன்ஸ்களை ரத்து செய்யாவிட்டால் மீண்டும் சுப்ரீம் கோர்ட்டுக்குச் செல்வேன்.

தமிழகத்திலும் ஆட்சி மாற்றம் வரவேண்டும். பல்வேறு ஊழல்கள் மூலம் கருணாநிதி சேர்த்துவைத்துள்ள பணத்தை பறிமுதல் செய்து அரசாங்கத்திடம் சேர்க்கவேண்டும்.
தமிழ்நாட்டில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ்-திமுக உறவு முறியாது.

இதனால் அதிமுக தான் அனைத்துக் கட்சிகளையும் ஒருங்கிணைத்து தேர்தலைச் சந்திக்க வேண்டும். அந்தக் கூட்டணிக்கு பொதுமக்கள் ஆதரவு தர வேண்டும். அப்படி ஆதரவு தந்தால் தான் கருணாநிதியை வீட்டுக்கு அனுப்ப முடியும் என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+