பார் கவுன்சில் துணை தலைவர் வீட்டில் சிபிஐ ரெய்டு-ரூ. 74 லட்சம் சிக்கியது
சென்னை: இந்திய பார்கவுன்சில் துணைத் தலைவர் தனபால்ராஜின் வீடு, அலுவலகத்தில் சிபிஐ அதிரடி ரெய்டு நடத்தி கணக்கில் வராத ரூ. 74 லட்சம் பணத்தை பறிமுதல் செய்தது.
உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத்தில் புதிய சட்டக் கல்லூரி ஒன்று தொடங்கப்பட்டுள்ளது. அதில் எல்.எல்.பி. படிப்பு தொடங்குவதற்காக இந்திய பார் கவுன்சிலின் அனுமதி கோரி விண்ணப்பிக்கப்பட்டது.
விண்ணப்பத்தைப் பரிசீலித்து அனுமதி வழங்குவதற்காக ஐந்து பேர் கொண்ட கமிட்டியை சட்டக் கல்விக் கமிட்டி அமைத்தது. இதில் தனபால்ராஜும் ஒரு உறுப்பினராக இடம் பெற்றார்.
இந்த நிலையில், அனுமதி வழங்குவதற்காக லஞ்சம் வாங்கியதாக அகில இந்திய பார் கவுன்சில் தலைவர் ராஜேந்திர ராணாவும், சுப்ரீம் கோர்ட் மூத்த வக்கீல் மனீஷ் தியாகியும் கைது செய்யப்பட்டனர். ராணா வீட்டில் சிபிஐ அதிரிடி ரெய்டு நடத்தி ரூ.1 லட்சத்தைக் கைப்பற்றியது.
சட்டக் கல்லூரி உள்பட டெல்லியை சுற்றிலும் 7 இடங்களில் சி.பி.ஐ. சோதனை நடத்தப்பட்டது. அவர்கள் மீது லஞ்ச வழக்கு பதிவு செய்யப்பட்டதாக சி.பி.ஐ. வட்டாரங்கள் தெரிவித்தன.
அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் சென்னை பாரிமுனையில் உள்ள பார் கவுன்சில் துணைத் தலைவர் தனபால்ராஜின் அலுவலகத்திலும், மைலாப்பூரில் உள்ள அவரது வீட்டிலும், அவரது உறவினர் வீட்டிலும், மேலும் சில இடங்களிலும் சோதனை நடந்தது.
இந்த சோதனையின்போது, ரூ.74 லட்சம் ரொக்கப் பணமும், மற்றும் ஆவணங்களும் கைப்பற்றப்பட்டதாகவும் சி.பி.ஐ. வட்டாரத் தகவல்கள் தெரிவித்தன. மேலும் விசாரணைக்காக டெல்லி சிபிஐ தலைமையகத்திற்கு வருமாறு கூறி தனபால்ராஜுக்கு சம்மன் வழங்கப்பட்டது.
இதையடுத்து முன்ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தனபால்ராஜும், அவரது உறவினரான சந்திரசேகரும் மனு தாக்கல் செய்துள்ளனர்.
அதில்,
சி.பி.ஐ. சோதனையில், பல்வேறு சட்டக் கல்லூரிகளை ஆய்வு செய்து தயாரிக்கப்பட்ட அறிக்கைகளை எனது வீட்டில் இருந்து கைப்பற்றினர். அங்கிருந்த பார் கவுன்சில் ஊழியர் ஆதிகேசவலுவின் பையில் இருந்த ரூ.28 லட்சத்து 50 ஆயிரம் தொகை கைப்பற்றப்பட்டது. எனது படுக்கை அறையில் இருந்து ரூ.60 ஆயிரம் கைப்பற்றப்பட்டது.
மைத்துனர் சந்திரசேகரின் வீட்டில் இருந்து ரூ.45 லட்சம் தொகை கைப்பற்றப்பட்டது. இது சம்பந்தமாக டெல்லியில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்தில் நாங்கள் 22-ந் தேதி ஆஜராக வேண்டுமென்று எங்களுக்கு சம்மன் அளித்துள்ளனர்.
நிலம் வாங்குவதற்காக வைக்கப்பட்டிருந்த பணத்தை கைப்பற்றி உள்ளனர். அதற்கான கணக்கை காட்டத் தயார். எனவே ஊழல் வழக்கு தொடர்பாக எங்களை கைது செய்யாமல் இருக்க முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.
இதை விசாரித்த நீதிபதி அருணா ஜெகதீசன், இருவருக்கும் 4 வார காலத்துக்கு இடைக்கால முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.
மேலும் சோதனையிடப்பட உள்ள 2 வங்கி லாக்கர்களை இவர்கள் கலைக்கக் கூடாது, இந்த 4 வார காலகட்டத்தில் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணைக்கு அழைக்கும்போது அதற்குத் தயாராக இருக்க வேண்டும், கோர்ட் முன்அனுமதி இல்லாமல் வெளிநாடுகளுக்கு போகக்கூடாது, இடைக்கால முன்ஜாமீன் 4 வாரத்துக்கு மேல் நீட்டிக்கப்பட மாட்டாது என்றும் நீதிபதி நிபந்தனைகள் விதித்து உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications