நெல்லையில் ராகுல் முன்பு கோஷ்டிப் பூசல்-வாசன் கோஷ்டி வெளியே, இளங்கோவன் கோஷ்டி வெளியே
நெல்லை, பாளையங்கோட்டையில் இன்று இளைஞர் காங்கிரஸ் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல் நடத்தினார் ராகுல் காந்தி. பாளையங்கோட்டையில் உள்ள செயின்ட் மேரீஸ் பள்ளி வளாகத்தில் இந்த கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு 60 பேர் அழைக்கப்பட்டிருந்தனர். கூட்டத்திற்கு அழைக்கப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் தாமதமாக வந்ததால் உள்ளே செல்ல அனுமதிக்கப்படவில்லை. இதனால் தொண்டர்கள் வெளியே நின்றபடி கோஷமிட ஆரம்பித்தனர்.
இந்த நிலையில் ஜி.கே.வாசன் கோஷ்டியைச் சேர்ந்தவர்களை மட்டும் நைஸாக உள்ளே அனுப்பினர் சிலர். இதனால் அங்கு கூடியிருந்த ஈவிகேஎஸ் இளங்கோவன் ஆதரவு கோஷ்டியைச் சேர்ந்தவர்கள் கோபமடைந்து கோஷமிட ஆரம்பித்தனர். இதனால் அங்கு சலசலப்பு ஏற்பட்டது.
இருப்பினும் அதைப் பொருட்படுத்தாமல் ராகுல் காந்தி கூட்டம் நடந்தது. கூட்டம் முடிந்த பின்னர் ராகுல் காந்தி வெளியே வந்தபோது அவரிடம் முறையிட இளங்கோவன் கோஷ்யிடினர் விரைந்து சென்றனர். ஆனால் ராகுலை நெருங்க அவர்கள் அனுமதிக்கப்படவில்லை. இதையடுத்து அங்கிருந்தபடியே தங்களிடம் வருமாறு அவர்கள் ராகுலை அழைத்தனர். ஆனால் அவர்களிடம் ராகுல் செல்லவில்லை. மாறாக அங்கிருந்து கிளம்பிப்போய் விட்டார்.