கக்கன் வீட்டில் ராகுல் காந்தி!
தான் கலந்து கொண்ட அனைத்து கூட்டங்களிலும் தலித்கள் அரசியலில் முக்கியத்துவம் பெற வேண்டும் என்பதை வலியுறுத்தினார்.
மதுரைக்கு நேற்று மாலை வந்தார் ராகுல் காந்தி. அங்கு இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகளை சந்தித்து உரையாடினார். பின்னர் அரசு சர்க்யூட் ஹவுஸுக்குச் சென்று தங்கினார்.
பின்னர் இரவு ஒன்பதரை மணியளவில் திடீரென கக்கன் வீட்டுக்குச் செல்ல முடிவெடுத்துக் கிளம்பினார். மேலூர் அருகே உள்ள தும்பைப்பட்டி கிராமத்தில்தான் கக்கன் வாழ்ந்த வீடு உள்ளது. அங்கு சென்ற ராகுல் காந்தி அங்குள்ள மணிமண்டபத்தில் உள்ள கக்கின் சிலை, புகைப்படங்களைப் பார்வையிட்டார். சிலைக்கும் மாலை அணிவித்தார்.
அவரை ஊராட்சித் தலைவர் பழனிச்சாமி, கக்கனின் தம்பி மகன் பாஸ்கரபூபதி, கிரா மக்கள் வரவேற்று அழைத்துச் சென்றனர்.
பின்னர் கக்கன் வாழ்ந்த வீட்டுக்குச் சென்றார் ராகுல் காந்தி. அங்கு கக்கனின் இன்னொரு தம்பி மகனான வெள்ளைச்சாமி வசித்து வருகிறார். அவரை சந்தித்த ராகுல் காந்தி வீட்டுக்குள் சென்று தரையில் அமர்ந்து பேசினார். பின்னர் வீட்டைப் பார்வையிட்ட ராகுல், அங்கிருந்த நெல் சேமித்து வைக்கும் குதிரைப் பார்வையிட்டார். இது என்ன என்று கேட்டார். வெள்ளைச்சாமி அதுகுறித்து விளக்கியதும் ஆச்சரியமடைந்தார்.
பின்னர் தண்ணீர் தருமாறு கேட்டு வாங்கிக் குடித்தார். பின்னர் அங்கிருந்து கிளம்பிய ராகுல், மந்தைச் சாவடி பகுதியில் உள்ள கக்கனின் உறவினரான பொன்னம்மாள் வீட்டுக்குப் போனார். ராகுல் வந்ததைப் பார்த்து கிராம மக்கள் அங்கு திரண்டு விட்டனர். அவர்களிடம் நெருங்கிய ராகுல் அவர்களிடம் கை குலுக்கி இயல்பாகப் பேசினார்.
பின்னர் அங்கிருந்து கிளம்பி பத்தரை மணியளவில் அழகர் கோவில் சாலையில் உள்ள ஆதி திராவிடர் மாணவர் விடுதிக்குள் நுழைந்தார். ராகுலைப் பார்த்த மாணவர்கள் ஆச்சரியத்துடன் திரண்டு வந்து அவரிடம் கை குலுக்கி மகிழ்ந்தனர். மாணவர்களிடம் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தார் ராகுல்.
பின்னர் மீண்டும் சர்க்யூட் ஹவுஸுக்குத் திரும்பினார். அங்கு வந்த பின்னர் இரவு உணவில் இறங்கினார். அவருக்கு செட்டிநாட்டு உணவு வகைகளான பால் பணியாரம், இனிப்பு சீயம், இட்லி, இடியாப்பம், அயிரை மீன், விரால் மீன் குழம்பு, வறுத்த கறி, நாட்டுக் கோழி ரசம், மிளகுக் கறி உள்ளிட்டவை பரிமாறப்பட்டன. அவை குறித்து கேட்டுக் கேட்டு ரசித்து, ருசித்துச் சாப்பிட்டார் ராகுல்.