ராஜாவுக்கு எதிராக அப்ரூவராக உதவியாளர் சந்தோலியா, ஸ்ரீவத்சவா முடிவு?
டெல்லி: 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் முன்னாள் அமைச்சர் ராஜாவுக்கு எதிராக அப்ரூவராக மாற அவரது முன்னாள் உதவியாளர்களான அதிகாரிகள் ஆர்.கே.சந்தோலியா மற்றும் ஏ.கே.ஸ்ரீவத்சவா ஆகியோர் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த வழக்கில் ஏற்கனவே முன்னாள் தொலைத் தொடர்புத்துறை செயலாளர் டி.எஸ்.மாத்தூர் ஒரு சாட்சியாக சாட்சியம் அளித்துள்ளார் என்பது நினைவிருக்கலாம். இதனால் ராஜாவுக்கு சிக்கல் வலுத்துள்ளது.
ராஜா அமைச்சராக இருந்தபோது அவருடைய தனிச் செயலாளராக இருந்தவர் சந்தோலியா. ஸ்ரீவத்சவா, தொலைத் தொடர்புத்துறையின் துணை இயக்குநராக இருந்தவர் ஆவார். 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டின்போது இவர்களும் அதில் முக்கியப் பங்காற்றியதாக கூறப்படுகிறது.
ஸ்ரீவத்சவாவை ஏற்கனவே பலமுறை சிபிஐ விசாரித்து விட்டது. இருப்பினும் சமீபத்தில்தான் சந்தோலியாவை சிபிஐ விசாரித்தது நினைவிருக்கலாம்.
ராஜா பதவி விலகிய பின்னர் கபில் சிபல் அமைச்சராக்கப்பட்டவுடன் முதல் வேலையாக தொலைத் தொடர்புத்துறையிலிருந்து, அவருடைய ஒரிஜினல் துறைக்கு மாற்றப்பட்டார் சந்தோலியா. சந்தோலியாவை தனது பொருளாதார ஆலோசகராக பயன்படுத்தி வந்தார் ராஜா என்பது குறிப்பிடத்தக்கது.