ஷார்ஜாவில் இந்திய வர்த்தகவியலாளர் பேரவை துவக்கம்
ஷார்ஜா: ஷார்ஜா இந்திய வர்த்தக மற்றும் கண்காட்சி மையத்தில் (மத்திய கிழக்கு) இந்திய வர்த்தகவியலாளர் பேரவை ஏற்படுத்தப்பட்டுள்ளது.இது குறித்து பேரவையின் இயக்குநர் ஜெனரல் ஸ்ரீபிரியா செய்தியாளர்களிடம் கூறுகையில்,
பேரவையின் உறுப்பினர்களாக டாக்டர் ஆஸாத் மூப்பன் (டிஎம் குரூப்), டாக்டர் பி.ஆர்.ஷெட்டி (என்.எம்.சி. குரூப்), ஃபெரோஷ் அல்லனா (இஃப்கோ குரூப்), டாக்டர் ஜே.ஆர். கங்காரமணி (அல் ஃபரா குரூப்), ஜாய் ஆலுக்காஸ் (ஜாய் ஆலுக்காஸ் குரூப்), மிக்கி ஜக்டியனி (லேண்ட்மார்க் குரூப் , டாக்டர் ராம் புக்ஸானி (காஸ்மாஸ்), சுதேஷ் அகர்வால் (ஜியெண்ட் குரூப்), சன்னி வர்கி (வர்கி குரூப்), சையத் எம். ஸலாஹுத்தீன் (ஈடிஏ அஸ்கான் ஸ்டார் குரூப்), விஜய் மல்கோத்ரா (கேபிஎம்ஜி) மற்றும் யூசுஃப் அலி (எம்கே குரூப்) ஆகியோரு இருப்பர்.
இதனைத் தொடர்ந்து விரைவில் இளம் தலைமுறை இந்திய வர்த்தகவியலாளர்களைக் கொண்டு குழுவும் அமைக்கப்படும்.
இப்பேரவையின் தலைமையகம் உலகின் மிக உயரமான வணிக கேந்திரங்களில் ஒன்றாகக் கருதப்படும் புர்ஜ் கலீஃபாவில் செயல்படும். வளைகுடாவில் தொழில் புரிந்து வரும் இந்திய தொழிலதிபர்கள் இப்பேரவையில் உறுப்பினர்களாகச் சேர வரவேற்கப்படுவார்கள்.
இந்திய தூதர் இப்பேரவையின் புரவலராகவும், கன்சல் ஜெனரல் எக்ஸ் அபிஸியோ உறுப்பினராகவும், சுதேஷ் அகர்வால் தற்காலிகத் தலைவராகவும் தேர்வு செய்யப்பட்டனர்.
இப்பேரவை இந்திய வர்த்தகர்களிடையே ஒருங்கிணைப்பு, இந்திய மற்றும் அமீரகத்திற்கு இடையே வர்த்தக அதிகரிப்பு, முதலீடு, இந்திய வர்த்தகத்திற்கு உதவிடுதல், இந்திய வர்த்தகர்களுக்கு ஏற்படும் இடையூறுகள் குறித்து சம்பந்தப்பட்ட இடத்திற்கு எடுத்துச்சென்று தீர்வு பெற உதவுதல், கருத்தரங்குகள். இந்திய வர்த்தகம் பல்வேறு நாடுகளுக்கு பரவிட உதவிடுதல் உள்ளிட்ட பல்வேறு நோக்கங்களைக் கொண்டு செயல்படும்.
விரைவில் இப்பேரவை அதிகாரப்பூர்வமாக இந்திய வர்த்தகத்துறை அமைச்சர் ஆனந்த் சர்மா மற்றும் அமீரக வெளிநாட்டு வர்த்தகத்துறை அமைச்சர் ஷேக்கா லுப்னா அல் காஸிமி ஆகியோரைக் கொண்டு துவங்கப்படும்.
ஷார்ஜா இந்திய வர்த்தக மற்றும் கண்காட்சி மையத்தில் ( மத்திய கிழக்கு ) கடந்த நவம்பர் மாதம் இந்திய ஜனாதிபதி பிரதீபா பாட்டீல் மற்றும் ஷார்ஜா ஆட்சியாளர் டாக்டர் ஷேக் சுல்தான் பின் முஹம்மது அல் காஸிமி ஆகியோரால் துவக்கி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.