எதைக் கொடுத்தாலும் வாக்களிக்க மக்கள் தயாரில்லை-ராதாரவி
சேலம்: எதை இலவசமாக கொடுத்தாலும் வாங்கிக் கொண்டு ஓட்டுப் போடுவார்கள் மக்கள் என்று தப்புக் கணக்குப் போட வேண்டாம். மக்கள் அதற்குத் தயாராக இல்லை என்று கூறியுள்ளார் ராதாரவி.
சேலம் மாவட்டம் ஆட்டையாம்பட்டி காவல் நிலையம் முன்பு விலைவாசி உயர்வு, தொடர்மின்வெட்டு, சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளதை கண்டித்து கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இதில் கலந்து கொண்டு ராதாரவி பேசுகையில்,
தமிழக முதல்வராக ஜெயலலிதா இருந்த போது மழை சேகரிப்பு திட்டத்தை கொண்டு வந்தார். இந்த திட்டமும், எம்.ஜி.ஆர். நடை முறைபடுத்திய சத்துணவு திட்டமும் காலத்தினால் அழிக்க முடியாதவை. கலர் டி.வி. தருவதாக சொல்லியதால் ஓட்டு போட்டீர்கள். இப்போது விலைவாசி உயர்வால் மக்கள் பாதிப்பு அடைந்துள்ளனர்.
நாட்டில் சர்வாதிகாரம் நிறைந்துள்ளது. ஓட்டு வாங்குவதற்காக இலவசங்களை வாரி இறைக்கிறார்கள் எதை கொடுத்தாலும் மக்கள் ஓட்டுப் போட தயாராக இல்லை. வட நாட்டு எம்.பி.க்கள் தமிழக எம்.பி.க்களை கேவலமாக பார்க்கிறார்கள். தமிழகத்தில் மீண்டும் நல்லாட்சி ஜெயலலிதா தலைமையில் அமையும் என்றார் ராதாரவி.