தேமுதிக பெண் நிர்வாகிகள் கட்சியை விட்டு நீக்கம்: விஜயகாந்த் அதிரடி
சென்னை: தேமுதிகவின் இரு முக்கிய பெண் நிர்வாகிகளை கட்சியை விட்டு நீக்கியுள்ளார் அக் கட்சியின் தலைவர் விஜயகாந்த்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் காஞ்சீபுரம் வடக்கு மாவட்டக் கழக மகளிரணி துணைச் செயலாளராக செயல்பட்டு வரும் குமாரி கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து இன்று முதல் நீக்கப்படுகிறார்.
அவருக்குப் பதிலாக பெருங்களத்தூர் பேரூர் கழக மகளிரணி செயலாளராக செயல்பட்டு வரும் குணசுந்தரி அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு, காஞ்சீபுரம் வடக்கு மாவட்ட கழக மகளிரணி துணை செயலாளராக இன்று முதல் நியமிக்கப்படுகிறார்.
அதே போல காஞ்சீபுரம் வடக்கு மாவட்டம் புனித தாமஸ் மலை ஒன்றிய கழக மகளிரணி செயலாளராக செயல்பட்டு வரும் இ.பி. விஜயலட்சுமி கட்சியின் அடிப்படை உறுப்பினரில் இருந்து நீக்கப்படுகிறார்.
புனித தாமஸ் மலை ஒன்றிய மகளிரணி செயலாளராக வி. திராவிடச் செல்வி இன்று முதல் நியமிக்கப்படுகிறார். அவர் செயல்பட்டு வந்த பீர்க்கங்கரணை பேரூர் கழக மகளிரணி செயலாளர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுகிறார் என்று கூறப்பட்டுள்ளது.
வழக்கமாக அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா தான் இவ்வாறு தனது கட்சியின் நிர்வாகிகளை அறிக்கை விட்டு தூக்குவார். அதே பாணியை அவருடன் கூட்டணி அமைக்கவுள்ளதாகக் கருதப்படும் விஜய்காந்தும் மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.