ஸ்பெக்ட்ரம் விசாரணை விவகாரம்-கத்காரியை சந்தித்தார் முரளி மனோகர் ஜோஷி
இந்த சந்திப்பின்போது ஸ்பெக்ட்ரம் விவகாரம் குறித்த கட்சியின் நிலைப்பாட்டை ஜோஷியிடம் எடுத்துரைத்தார் கத்காரி என்று தெரிகிறது. அதேபோல தான் பேசியது குறித்தும் கத்காரியிடம் விளக்கினார் ஜோஷி என்று தெரிகிறது.
மேலும், ஜேபிசி விசாரணை தேவை என்ற கட்சியின் நிலைப்பாட்டை தான் ஒருபோதும் எதிர்க்கவில்லை என்றும், பொதுக்கணக்குக் குழுவின் தலைவர் என்ற முறையில் மட்டுமே தான் பேசியதாகவும் ஜோஷி தெரிவித்தாராம். மேலும் பொதுக்கணக்குக் குழு தலைவராக மட்டுமே தான் பேசியதாகவும், தனது பாஜக சார்பிலான கருத்து அல்ல என்பதையும் அவர் கத்காரியிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இந்த சந்திப்பின்போது இரு தரப்பும் தத்தமது நிலையை தெளிவுபடுத்திய போதிலும், பொதுக் கணக்குக் குழுவுக்கு போதிய அதிகாரம் உள்ளதாக ஜோஷி கூறியது, கட்சியின் நிலைப்பாட்டுக்கு நிச்சயம் முரணானதாகவே கட்சித் தலைமையால் பார்க்கப்படுகிறதாம். இந்த இரட்டை நிலைப்பாடு மக்கள் மத்தியில் பாஜக மீது அதிருப்தியையும், கெட்ட பெயரையும் ஏற்படுத்தும் என்றும் பாஜக தலைமை கருதுகிறதாம்.
பொதுக் கணக்குக் கமிட்டி முன்பு ஆஜராகி விளக்கம் அளிக்கத் தயார் என்று காங்கிரஸ் கூட்டத்தில் பிரதமர் மன்மோகன் சிங் அறிவித்தது முதலே ஜேபிசி விசாரணை என்ற பாஜகவின் கோரிக்கையிலிருந்து பொதுக் கணக்குக் குழுவுக்கு அனைவரின் கவனமும் திரும்பி விட்டது. மேலும் இதுதொடர்பாக ஜோஷிக்கு பிரதமர் கடிதம் எழுதினார். அது குறித்து பரிசீலிக்கப்படும் என ஜோஷியும் பதிலளித்தார். இதனால் அனைவரின் முழுக் கவனமும் தற்போது ஜோஷி தலைமையிலான பொதுக் கணக்குக் குழு மீது திரும்பி விட்டது. இதனால் பாஜக அதிருப்தி அடைந்துள்ளது.