800 தலைமை தபால் நிலையங்களில் ஏடிஎம் வசதி : தபால் துறை முடிவு
நெல்லை: நாடு முழுவதும் உள்ள 800 தபால் நிலையங்களில் ஏடிஎம் வசதி ஏற்படுத்த தபால் துறை தி்ட்டமிட்டுள்ளது. இதற்கான முதல் கட்ட பணிகள் நடந்து வருகின்றன.
மக்களிடம் நம்பிக்கை பெற்ற தபால்துறை வளர்ச்சி பாதையை நோக்கி செல்கிறது.தனியார் நிறுவனங்களுடன் இணைந்து தங்க விற்பனை, மியூச்சுவல் பண்ட்,இன்சூரன்ஸ் போன்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
சரக்கு போக்குவரத்திலும் மக்களை கவர்ந்து இழுக்கும் வகையில் பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. வீட்டிற்கே வந்து பொருட்களை எடுத்துச் சென்று டோர் டெலிவரி கொடுக்கும் வசதியும் உள்ளது. இவ்வாறு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வரும் தபால்துறை தற்போது ஏடிஎம் வசதியையும் ஏற்படுத்திக் கொடுக்கதிட்டமிட்டுள்ளது.
மேலும் தபால் நிலையங்கள் ஏற்கனவே கம்யூட்டர் மயமாகி விட்டன. இதன் மூலம் ஊழியர்களுக்கு வேலை பளு குறைந்ததுடன் வாடிக்கையாளர்களுக்கும் துரித சேவை கிடைத்து வருகிறது.
சேமிப்பு கணக்கில் நாட்டிலேயே முதல் இடத்தை தபால் துறை வகித்து வருவதாக தபால் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால் சேமிப்பு கணக்கு வாடிக்கையாளர்களின் வசதிக்காக வங்கியில் உள்ளது போல் தபால் நிலையங்களிலும் ஏடிஎம் வசதியை ஏற்படுத்த திட்டமிட்டு அதற்கான முற்சியில் இறங்கியுள்ளது.