காரைக்காலில் பழமையான பாலம் சேதம்: போக்குவரத்து நிறுத்தம்
காரைக்கால்: தேசிய நெடுஞ்சாலையில் நாகபட்டினத்தையும் காரைக்காலையும் இணைக்கும் பழமை வாய்ந்த பாலத்தின் ஒரு பகுதி சேதமடைந்துள்ளது. இதனால் அங்கு போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.
காரைக்கால் டி. ஆர். பட்டினத்தில் உள்ளது திருமலைராஜனார் பாலம். இந்த பாலம் கடந்த 1853-ம் ஆண்டு பிரான்ஸ் நாட்டவர்களால் கட்டப்பட்டது. நேற்று இதன் அடிப்பகுதியில் திடீர் என்று செங்கல் கற்கள் பெயர்ந்து விழுந்தன. இந்த தகவல் அறிந்த பொதுப்பணித் துறை அதிகாரிகள் பாலத்தை பார்வையிட்டனர்.
பாலம் இனி வாகனப் போக்குவரத்திற்கு பயன்படாது என்று அவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து இந்த வழியாக கிறித்தவர்களின் புனிதத் தலமான வேலாங்கண்ணிக்கு செல்லும் வாகனங்கள் வேறு வழியாகத் திருப்பிவிடப்பட்டன. மேலும், நாகப்பட்டினம் உள்ளிட்ட பிற பகுதிகளுக்குச் செல்லும் பேருந்துகள் பனங்காட்டான்குடி வழியாகத் திருப்பிவிடப்பட்டன.
இந்த பாலம் பழுதடைந்து இருப்பதாக நெடுங்காலமாகவே மக்கள் புகார் தெரிவித்த வண்ணம் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications