சென்னை: தீப்பிடித்து எரிந்த சிலிண்டர் பொருத்தப்பட்ட பள்ளி வேன்
சென்னை: காஸ் சிலிண்டரில் இயங்கும் பள்ளிக்கூட வேன் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதனால் அப்பகுதியில் நின்றிருந்தவர்கள் பீதியடைந்து ஓடினர்.
சென்னை வேப்பேரி, ரித்தர்டன் சாலையில், ஒரு தனியார் பள்ளிக்கூடம் உள்ளது. அப்பள்ளி அருகே இன்று காலை ஒரு மாருதி ஆம்னி வேன் நிறுத்தப்பட்டிருந்தது.
கால்டாக்சி நிறுவனத்திற்குச் சொந்தமானது இந்த வேன். இதில் ஆட்களை ஏற்றிச் சென்று வருகிறார்கள். இந்தநிலையில் அந்த வேனின் பேட்டரி பகுதியிலிருந்து புகை வரத் தொடங்கியது. இதையடுத்து வேனில் இருந்த நபர் வெளியே குதித்தார். அடுத்த சில விநாடிகளில் வேன் குபீரென தீப்பிடித்து எரிந்தது.
தீயில் பட்டு வேன் கண்ணாடிகள் சிதறின. இதைப் பார்த்து அப்பகுதியில் இருந்தவர்கள், பள்ளிக்கு வந்து கொண்டிருந்த மாணவ, மாணவியர் பீதியடைந்து ஓடினர். இருப்பினும் வேனில் பொருத்தப்பட்டிருந்த காஸ் சிலிண்டர் வெடிக்கவில்லை. அது வெடித்திருந்தால் மிகப் பெரிய உயிர்ச்சேதம் ஏற்பட்டிருக்கும்.
வேப்பேரி போலீஸார் விரைந்து வந்தனர். தீயணைப்புப் படையினரும் விரைந்து தீயை அணைத்தனர்.
வேனை ஓட்டி வந்த நபர் தப்பி விட்டார். போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications