நெல்லை அருகே ரவுடி அடித்து கொலை: மனைவியே கொன்றார்
நெல்லை: நெல்லை அருகே பிரபல ரவுடியை மனைவியே அடித்து கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை பேட்டையை அடுத்த திருப்பணி கரிசல்குளத்தை சேர்ந்தவர் சின்னலெப்டன் என்ற செல்வராஜ். இவரது மனைவி சொர்ணகாந்தி. இவர்களுக்கு 2 மகள்களும், 1 மகனும் உள்ளனர்.
செல்வராஜ் மீது பல திருட்டு, கொலை, வழிப்பறி, கொள்ளை வழக்குகள் உள்ளன. கடந்த 3 மாதங்களுக்கு முன்புதான் அவர் சிறையில் இருந்து வெளியே வந்தார். பின்னர் அந்த பகுதியில் ரவுடி போல் சுற்றி வந்தார். இந்நிலையில் செல்வராஜுக்கும், அவரது தங்கை முறையான லலிதா என்ற பெண்ணுக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இதனால் குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டது.
கடந்த 10 நாட்களுக்கு முன்பு லலிதாவை 2வது திருமணம் செய்த செல்வராஜ் அவளை சுத்தமல்லி பாரதி நகரில் வீடு பிடித்து தங்க வைத்தார். மேலும் அடிக்கடி குடித்துவிட்டு வந்து முதல் மனைவி சொர்ணகாந்தியிடம் தகராறு செய்து வந்தார்.
நேற்று அதிகாலை 3 மணிக்கு திடீரென திருப்பணிகரிசல்குளம் வந்தார். அங்கு குடிபோதையில் வீட்டை திறக்குமாறு மனைவியிடம் தகராறு செய்து ரகளையில் ஈடுபட்டார். சொர்ணகாந்தி வீட்டின் கதவை திறந்ததும் அவரை அடிக்க பாய்ந்தார். இதனால் ஆத்திரமடைந்த சொர்ணகாந்தி அவரை உருட்டு கட்டையால் சரமாரியாக தாக்கினார்.
இதி்ல் பலத்த காயம் அடைந்த செல்வராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். என்ன செய்வது என்று குழம்பிய சொர்ணகாந்தி ரத்தகறை படித்த உடையுடன் நேராக பேட்டை காவல் நிலையம் சென்றார். அங்கு தனது கணவர் கீழே விழுந்து இறந்து விட்டார் என்று கூறியுள்ளார்.
மருத்துவமனைக்கு செல்லாமல் இங்கு ஏன் வந்தீர்கள் என்று கேட்டபோது சண்டையில் அடித்து விட்டதாக கூறியுள்ளார். உடனடியாக நெல்லை உதவி போலீஸ் கமிஷனர் இன்க்னோஷியஸ் லயோலா, இன்ஸ்பெக்டர் பர்னாஸ், சப்-இன்ஸ்பெக்டர் ராபர்ட் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.












Click it and Unblock the Notifications