சிட்டிவங்கி மேலாளரின் ரூ.400 கோடி மோசடி-சிஇஓ விக்ரம் பண்டிட் மீது புகார்

ஹரியானா மாநிலம் கர்கானில் உள்ள சிட்டிவங்கி கிளையின் மேலாளராக இருந்தவர் சிவராஜ் பூரி. இவர் பல்வேறு மோசடிகள் மூலம் வாடிக்கையாளர்களிடமிருந்து ரூ. 400 கோடி வரை சுருட்டி விட்டதாக பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக பூரி கைது செய்யப்பட்டுள்ளார்.
அதேபோல பூரியுடன் இணைந்து மோசடியில் ஈடுபட்டதாக ஹீரோ குழும தலைமை நிதி அதிகாரி சஞ்சய் குப்தாவும் கைதாகியுள்ளார். ஹீரோ குழுமத்திற்கு வரும் முதலீட்டாளர்களை தவறான தகவல்களைக் கூறி பூரியிடம் அனுப்பி வைத்து அவரிடமிருந்து பெருமளவு கமிஷனைப் பெற்றுள்ளார் குப்தா என்பது குற்றச்சாட்டு.
கிட்டத்தட்ட 20 நிறுவனங்களை மோசடி செய்து பணத்தை சுருட்டியுள்ளார் பூரி என்று கர்கான் போலீஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், சிட்டி வங்கியின் உயர் அதிகாரிகள் மீதும் புகார்கள் எழுந்துள்ளன. நேற்று பண மோசடியால் ஏமாந்தவர்களில் ஒருவரான முதலீட்டாளர் சுனில் அகர்வால் என்பவர் கர்கான் காவல் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்துள்ளார். அதில், வங்கியின் தலைமை செயலதிகாரி விக்ரம் பண்டிட், அவருடைய மூத்த ஆலோசகர் வில்லியம் ரோட்ஸ், வட அமெரிக்க சிட்டிவங்கிக்கான தலைமை ஆபரேட்டிங் அதிகாரி டக்ளஸ் பீட்டர்சன் ஆகியோர் மீது புகார் கூறியுள்ளார்.
சிவராஜ் பூரி, போலீஸார் நடத்திய விசாரணையின்போது வங்கியின் உயர் அதிகாரிகளுக்கும் இதில் தொடர்பு உள்ளதாக கூறியுள்ள நிலையில்தற்போது தலைமை செயலதிகாரி உள்ளிட்டோர் மீது புகார்கள் வந்துள்ளது பரபரப்பைக் கூட்டியுள்ளது.
ஆனால் தங்களது வங்கியின் உயர் அதிகாரிகளுக்கு இதில் எந்தத் தொடர்பும் இல்லை என்று சிட்டிவங்கி மறுத்துள்ளது. இதுகுறித்து வங்கி வெளியிட்ட அறிக்கையில், சிவராஜ் பூரி கூறியுள்ளது தவறான புகார்களாகும். வங்கியின் எந்த ஒரு உயர் அதிகாரிக்கும் இதில் தொடர்பில்லை. அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை பூரி சுமத்தியுள்ளார். இதை நாங்கள் சட்டரீதியாக உறுதியுடன் எதிர்ப்போம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications