பென்னாகரம்: மாற்றியது மருத்துவமனை பெயர்ப் பலகையை மட்டும்தான்-ஜெயலலிதா
சென்னை: பென்னாகரம் அரசு தலைமை மருத்துவமனையில் அடிப்படை வசதிகளை செய்து தராததைக் கண்டித்து அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் சட்டமன்ற இடைத் தேர்தலின் போது, தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக பண பலம், படை பலம், அதிகார பலம் ஆகியவற்றை பயன்படுத்தியதோடு மட்டுமல்லாமல், பென்னாகரம் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவமனையாக மாற்றப்படும் என்ற ஒரு வாக்குறுதியும் திமுக அரசால் அளிக்கப்பட்டது.
பென்னாகரம் இடைத் தேர்தலில் வெற்றி பெற்று 6 மாத காலத்திற்கு மேலாகியும், மருத்துவமனை பெயர்ப் பலகை மாற்றப்பட்டதைத் தவிர வேறு எந்த நடவடிக்கையும் இதுநாள் வரை எடுக்கப்படவில்லை.
இந்த மருத்துவமனையில் மருத்துவர்கள் மற்றும் இதரப் பணியாளர்கள் பற்றாக்குறை நிலவுவதாகவும், உயிர் காக்கும் சிகிச்சைக்குத் தேவையான மருந்துகள் மற்றும் நவீன கருவிகள் இல்லை என்றும், ஆம்புலன்ஸ் வசதி இல்லை என்றும், சுகாதாரமற்ற சூழ்நிலை நிலவுவதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
முதலுதவி சிகிச்சைக்குக் கூட தர்மபுரி அரசு மருத்துவமனையை நாடிச் செல்ல வேண்டிய துர்ப்பாக்கிய நிலை நிலவுகிறது.
2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டை தகுதி இல்லாத லெட்டர் பேடு நிறுவனங்களுக்கு ஒதுக்கியதன் மூலம் 1 லட்சத்து 80 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு ராசா மூலம் இந்திய நாட்டிற்கு இழப்பை ஏற்படுத்தி உள்ளார் கருணாநிதி.
எனவே, 2ஜி ஸ்பெக்ட்ரம் இமாலய ஊழல் குறித்து விசாரணை நடத்த நாடாளுமன்ற கூட்டுக் குழு அமைக்காத மத்திய அரசைக் கண்டித்தும், பென்னாகரம் அரசு தலைமை மருத்துவமனையில் அடிப்படை வசதிகளை செய்து தராத தி.மு.க. அரசைக் கண்டித்தும், அடிப்படை வசதிகளை செய்து தர வலியுறுத்தியும், அதிமுக சார்பில் ஜனவரி 12ம் தேதி பென்னாகரம் அரசு தலைமை மருத்துவமனை எதிரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications