லலித் மோடிக்கு சென்னை போலீஸ் மீண்டும் சம்மன்!
சென்னை: ஐபிஎல் கிரிக்கெட்டில் நடந்துள்ள பண மோசடிகள் தொடர்பில் விசாரணைக்கு வருமாறு ஐபிஎல் முன்னாள் கமிஷனர் லலித் மோடிக்கு மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது சென்னை போலீஸ்.
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளை நடத்தியதில் ஏராளமான முறைகேடுகள் நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. ஐ.பி.எல். அமைப்பின் தலைவராக இருந்த லலித் மோடி மற்றும் அதன் நிர்வாகிகள் 6 பேர் மீது புகார் தெரிவித்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாடு வாரிய கவுரவ செயலாளர் சீனிவாசன், சென்னை போலீஸ் கமிஷனர் ராஜேந்திரனிடம் புகார் தெரிவித்திருந்தார்.
இது தொடர்பாக மத்திய குற்றப்பிரிவு போலீஸ் துணை கமிஷனர் ஸ்ரீதர் விசாரணை நடத்தி வருகிறார். லலித் மோடி மற்றும் ஐ.பி.எல். அமைப்பின் நிர்வாகிகள் ஸ்ரீகிருஷ்ணமாச் சார், குணால்தாஸ் குப்தா, வேலுநாயர், ஆண்ட்ரூ ஜார்ஜியோ, சியூமென் சோப்ரியா, அஜய்வர்மா ஆகிய 7 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டது.
கடந்த வாரம் இவர்கள் அனைவரும் ஆஜராவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் லலித் மோடியின் மும்பை அலுவலகத்துக்கு அனுப்பப்பட்ட சம்மனை, வாங்க மறுத்து, திருப்பி அனுப்பி விட்டனர்.
குணால் தாஸ் குப்தா மட்டும் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் உள்ள மத்திய குற்றப்பிரிவு போலீசில் ஆஜராகி விளக்கம் அளித்தார். அஜய்வர்மா விபத்தில் சிக்கி சிகிச்சை பெற்று வருவதால் அவகாசம் கேட்டுள்ளார். இதேபோல மற்ற 4 பேரும் வெவ்வேறு காரணங்களை கூறி அவகாசம் கேட்டுள்ளனர். இதையடுத்து லலித் மோடி உள்பட 6 பேருக்கும் மீண்டும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இந்த மாத இறுதிக்குள் ஆஜராக வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications