'2050-க்குள் உலகின் இரண்டாவது பொருளாதார வல்லரசாகிவிடும் இந்தியா!' - பிரைஸ்வாட்டர்கூப்பர்ஸ்
லண்டன்: 2050ம் ஆண்டு உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரமாக, பலம் வாய்ந்த ஜாம்பவானாகத் திகழும் இந்தியா என பிரைஸ்வாட்டர்கூப்பர்ஸ் நிறுவனம் தனது அறிக்கையில் கூறியுள்ளது.
2011 முதல் 2050 வரையிலான காலகட்டத்தில் இந்தியப் பொருளாதாரத்தின் வளர்ச்சி ஜப்பானையும் சீனாவையும் பின்னுக்குத் தள்ளிவிடும் என்று அந்நிறுவனத்தின் தலைமைப் பொருளியலறிஞர் ஜான் ஹாக்ஸ்வொர்த் கூறியுள்ளார்.
உலக நாடுகளின் பொருளாதார வளர்ச்சி குறித்த தங்கள் ஆய்வறிக்கைய அந்நிறுவனம் நேற்று வெளியிட்டது. அப்போது அறிக்கையில் உள்ள முக்கிய சாராம்சம் குறித்துப் பேசிய ஜான் ஹாக்ஸ்வொர்த், "இந்தியாவின் மொத்த உற்பத்தி மற்றும் வாங்கும் திறன் மற்றெல்லா நாடுகளையும் பின்னுக்குத் தள்ளிவிடும் போக்கு நிலவுகிறது. அதைத்தான் இந்த அறிக்கை காட்டுகிறது" என்றார்.
"21-ம் நூற்றாண்டைப் பொருத்தவரை மிகப் பெரிய பொருளாதார வல்லரசுகள் மூன்றுதான். அமெரிக்கா, சீனா மற்றும் இந்தியாதான் அவை. இந்த வரிசை வரும் ஆண்டுகளில் அமெரிக்கா, இந்தியா, சீனா என்று மாறும் நிலை வந்துள்ளது" என்கிறார் ஜான் ஹாக்ஸ்வொர்த்.
ஆனால் இந்த நிலையை அடைய, உள்கட்டமைப்பு, மின்சாரம், கிராமப்புற கல்வி மேம்பாட்டில் இந்தியா கவனம் செலுத்துவது அவசியம். இதைவிட முக்கியம் அரசின் செயல்பாடு சிறப்பாக அமைய வேண்டும். திறந்த வாணிகம், பெண்களுக்கு அதிக சுதந்திரம் போன்றவற்றில் இந்தியா கவனம் செலுத்த வேண்டும்" என்றார் ஹாக்ஸ்வொர்த்.












Click it and Unblock the Notifications