மன்மோகன், சோனியாவை சந்திக்கிறார்கள் தெலுங்கானா எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள்
டெல்லி: தெலுங்கானா விவகாரம் தொடர்பாக அப்பிராந்தியத்தைச் சேர்ந்த எம்.பிக்களும், எம்.எல்.ஏக்களும் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்திக்கவுள்ளனர்.
சங்கராந்தி தினமான ஜனவரி 15ம் தேதி டெல்லி சென்று இவர்கள் பிரதமரையும், சோனியாவையும் சந்திக்கத் திட்டமிட்டுள்ளனர்.
ஸ்ரீகிருஷ்ணா கமிட்டி, தெலுங்கானாவுக்கான தீர்வை தெளிவாகச் சொல்லாமல் குழப்பமான பரிந்துரைகளைக் கொடுத்துள்ளது. இந்த அறிக்கை வெளியானது முதல் தெலுங்கானா பகுதியில் பதட்டம் நிலவி வருகிறது. ஹைதராபாத்தில் உள்ள உஸ்மானியா பல்கலைக்கழக மாணவர்கள் பெரும் போராட்டத்தில் குதிப்பதைத் தடுக்கும் வகையில் பல்கலைக்கழகத்திற்கு வெளியே அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
கிட்டத்தட்ட மொத்தம் 70,000 படையினர் ஆந்திராவில் முகாமிட்டுள்ளனர். இவர்களில் 30 ஆயிரம் பேரை ஹைதராபாத்தில் குவித்து வைத்துள்ளனர். இந்தப் படையினரை வாபஸ் பெற வேண்டும் என தெலுங்கானா பகுதி எம்.பிக்கள் கோரியுள்ளனர். ஆனால் அதை முதல்வர் கிரண் குமார் ரெட்டி நிராகரித்துள்ளார். இவை மத்திய அரசின் படை, என்னால் எதுவும் செய்ய முடியாது என்று அவர் கூறியுள்ளார்.
இதையடுத்து வருகிற 15ம்தேதி டெல்லி சென்று பிரதமரையும், சோனியாவையும் சந்தித்து படையினரை வாபஸ் பெறுமாறு கோர தெலுங்கானா பகுதி எம்.பிக்களும், எம்.எல்.ஏக்களும் திட்டமிட்டுள்ளனர். மேலும் உடனடியாக தெலுங்கானாதனி மாநிலத்தை அமைக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரவுள்ளனர்.












Click it and Unblock the Notifications