ஓடும் ரயிலில் பிறந்த குழந்தைக்கு மமதா பானர்ஜி பெயர்: தாயும், சேயும் நலம்
கர்னால்: ஹரியானா மாநிலத்தில், ஓடும் ரயிலில் பிறந்த பெண் குழந்தைக்கு ரயில்வே அமைச்சர் மமதா பானர்ஜியின் நினைவாக அவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது.
அந்த குழந்தை குருஷேத்ரா மற்றும் கர்னால் ரயில் நிலையங்களுக்கு இடையே ஓடிக் கொண்டிருந்த பரௌனி எக்ஸ்பிரஸ் ரயிலில் கடந்த சனிக்கிழமை பிறந்தது. ரயிலில் உள்ள எஸ்-9 பெட்டியில் பயணம் செய்த பெண்களின் உதவியால் குழந்தை பிறந்தது.
இது குறித்து குழந்தையின் தாய் ஆர்த்தியுடன் பயனித்த அவரது மாமனார் தயானந்த் கூறியதாவது,
ஓடும் ரயிலில் பிறந்ததால் குழந்தைக்கு மமதா பானர்ஜி என்று பெயர் சூட்ட முடிவு செய்தோம். அவள் பிறப்பால் நாங்கள் பெரு மகிழ்ச்சி அடைந்துள்ளோம். இது ஆர்த்தியின் மூன்றாவது மகள் என்றார்.
இது குறித்து ரயில்வே அதிகாரிகள் தெரிவித்ததாவது,
சன்டிகாரில் இருந்து 110 கிமீ தொலைவில் இருக்கும் குருஷேத்ராவை கடந்து சென்று கொண்டிருக்கையில் ஆர்த்திக்கு பிரசவ வலி ஏற்பட்டது. உடனே அடுத்த ஸ்டேஷனான கர்னாலுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அவர்கள் ஒரு ஆம்புலன்ஸை தயார் நிலையில் வைத்திருந்தனர்.
ஆனால் குழந்தை ரயிலிலேயே பிறந்துவிட்டது. அதன் பிறகு தாயும், சேயும் கர்னால் சிவில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர் என்றனர்.












Click it and Unblock the Notifications