122 லைசென்ஸ்களையும் ரத்து செய்தால் என்ன? - அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் ஊழலே நடக்கவில்லை என்று சாதிக்க ஆரம்பித்துள்ளார் மத்திய தொலைத் தொடர்புத்துறைக்கு கூடுதலாக பொறுப்பு வகிக்கும் கபில் சிபல்.
இன்னொரு பக்கம், அபராதமாக ஒரு தொகை பெற்றுக் கொண்டு, முறைதவறிய நிறுவனங்களை அனுமதிக்க ஆரம்பித்துள்ளது அரசு.
ஆனால் இதற்கு முட்டுக்கட்டை போடும் விதத்தில் இன்று உச்சநீதிமன்றத் தீர்ப்பு அமைந்துள்ளது.
ஆ ராசா காலத்தில் நடந்த ஒட்டுமொத்த 2 ஜி அலைக்கற்றை ஏலத்தையுமே ரத்து செய்துவிட்டு, மீண்டும் புதிதாக ஏலம் விட வேண்டும். அரசுக்கு ஏற்பட்டுள்ள நஷ்டம் சரி செய்யப்பட வேண்டும் என்று கோரி ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணிய சாமி மற்றும் மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் உச்சநீதி மன்றத்தில் வழக்குப் பதிவு செய்தனர்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. ஆ ராசா காலத்தில் வழங்கப்பட்ட லைசென்ஸ்கள் உள்பட 122 லைசென்ஸ்களையும் ஏன் ரத்து செய்யக் கூடாது என்று கேட்டு மத்திய அரசுக்கும் மத்திய தொலைத் தொடர்புத் துறைக்கும் இன்று நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது உச்ச நீதிமன்றம்.
இதுகுறித்து கருத்து தெரிவித்த சுப்பிரமணிய சாமி, "குறிப்பிட்ட சில நிறுவனங்களின் உரிமங்களை மட்டும் ஏன் கேன்சல் பண்ண வேண்டும்... ஒட்டுமொத்த ஒதுக்கீடுமே முறையற்றது என தலைமை கணக்குத் தணிக்கை அதிகாரியே கூறியுள்ளார். இதில் குறை கண்டுபிடிக்க முயல்கிறார் அமைச்சர் கபில் சிபல். இது தவறு, ஊழலை மூடி மறைக்கும் முயற்சி. அதனால்தான் 122 லைசென்ஸ்களையுமே ரத்து செய்யச் சொல்கிறோம். இந்த வழக்கின் உண்மையான நோக்கம் சுப்ரீம் கோர்ட்டுக்குப் புரிந்திருப்பது மிகுந்த மகிழ்ச்சியை அளித்துள்ளது" என்றார்.
உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவை பாஜகவும் வரவேற்றுள்ளது.












Click it and Unblock the Notifications