பெரியார் போதித்த நாத்திக நெறியை உலகெங்கும் பரப்புவோம்-கி.வீரமணி
திருச்சி: நாம் அனைவரும் பெரியார் கொள்கையில் உறுதியாக இருந்து, மகளிர் முன்னேற்றத்துக்கு பாடுபட வேண்டும். உலக அளவில் பெரியார் கொள்கை சிறந்த பரவி வருகிறது. நாத்திகத்தை உலகம் முழுவதும் பரப்புவோம் என்று கூறியுள்ளார் தி.க. தலைவர் கி.வீரமணி.
திராவிடர் கழகம், நாத்திகர் மையம், பகுத்தறிவாளர் கழகம் ஆகியவை இணைந்து உலக நாத்திகர் மாநாடு கடந்த 7-ந்தேதி திருச்சி பெரியார் நூற்றாண்டு கல்வி வளாகத்தில் தொடங்கியது. நேற்று மாநாட்டு நிறைவு விழா நடந்தது.
அப்போது கி.வீரமணி பேசுகையில், மாநாட்டில் நாத்தீகம் பற்றிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. தந்தை பெரியார் பிடித்த சுடரை, நாம் தொடர்ந்து பிடித்து வர வேண்டும். மதசார்பற்ற தன்மை, சம உரிமை போன்றவற்றால் நாம் அனைவரும் முன்னுக்கு வர முடியும்.
ஆகையால் நாம் அனைவரும் பெரியார் கொள்கையில் உறுதியாக இருந்து, மகளிர் முன்னேற்றத்துக்கு பாடுபட வேண்டும். உலக அளவில் பெரியார் கொள்கை சிறந்த பரவி வருகிறது.
மாநாட்டு மலரை அனைத்து மொழிகளில் அச்சடித்து, இந்தியா முழுவதும் பெரியார் கொள்கை பரவ வேண்டும். அதற்கான முயற்சிகளில் நாம் ஈடுபடுவோம் என்றார்.
முன்னதாக, நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
- பிறப்பால் அனைவரும் சமமே. அனைவர்களின் வாழ்விலும் சம உரிமை தொடர வேண்டும்.
- அரசியல், கல்வி மற்றும் சட்டத்துறைகளில் இருந்து மதத்தைப்பிரித்து மதசார்பற்ற தன்மையை நாம் கட்டி காப்போம்.
- சமூக பங்கேற்பை மேம்படுத்த வேண்டுமானால் வாழ்வில் எல்லா நிலைகளிலும், மதசார்பற்ற, ஜனநாயக தன்மை நிலவவும் முன்னுரிமை தரப்பட வேண்டும்.
- போர்களில் இருந்து அமைதிக்கு திரும்பவும், அடிமைத்தனத்தில் இருந்து விடுதலை பெறவும், மூடநம்பிக்கைகளில் இருந்து தெளிவு பெறவும், பிரிவு பட்ட நிலையில் இருந்து ஒருங்கிணைந்து செயல்படும் கூட்டுபணிக்கு புதிய சமூகம் நடைபோட வேண்டுமானால் நாத்திக நன்னெறியை பரப்புவதே ஒரே வழியாகும்.












Click it and Unblock the Notifications