ஒரு குழந்தை திட்டத்தை எதிர்த்து 2 குழந்தை பெற்றதால் டிஸ்மிஸ் ஆனவர் வழக்கு
பெய்ஜிங்: சீனப் பேராசிரியர் ஒருவரின் மனைவி இரண்டாவது குழந்தை பெற்றதால் அவர் டிஸ்மிஸ் செய்யப்பட்டார். இதையடுத்து அவர் நீதிமன்றத்தில் ஒரு குழந்தை கொள்கையை எதிர்த்து வழக்கு தொடர்ந்துள்ளார்.
சீன இளைஞர் பல்கலைக்கழகத்தில் யூனிவர்சிட்டியில் அரசியல் பாடம் எடுக்கும் துணை பேராசிரியாராக இருந்தவர் யாங் ஜிஜு. அவரது மனைவி கடந்த 2009-ம் ஆண்டு டிசம்பர் மாதம் இரண்டாவது குழந்தை பெற்றெடுத்தார். இந்த தகவல் தெரிய வந்த அதிகாரிகள் அவரை கடந்த 2010-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் டிஸ்மிஸ் செய்தனர்.
இதையடுத்து தற்போது யாங் சீன நீதிமன்றத்தில் ஒரு குழந்தை கொள்கையை எதிர்த்து வழக்கு தொடர்ந்துள்ளார். அதில் அவர் இந்த கொள்கையை முழுவதுமாக நீக்காவிட்டாலும், அதில் சில மாற்றங்களாவது கொண்டு வர வேண்டும் என்று கூறியுள்ளார்.
உலகளவில் சீனா மக்கள் தொகையில் முதலிடத்தில் உள்ளது. மக்கள் தொகை நாளுக்கு நாள் பெருகிக் கொண்டே போவதால், சீன அரசு மக்கள் தொகையை குறைக்கும் பொருட்டு ஒரு குழந்தை கொள்கையை கொண்டு வந்தது. அதன்படி ஒரு தம்பதி ஒரு குழந்தை மட்டுமே பெற்றுக் கொள்ள வேண்டும்.
இதற்கிடையே, இரண்டாவது குழந்தைக்கு தந்தையாகியுள்ள யாங்கிற்கு குடும்ப கட்டுப்பாட்டு வாரியம் ரூ. 16 லட்சத்து 34 ஆயிரத்து 908 அபராதம் விதித்துள்ளது.












Click it and Unblock the Notifications