பருப்பு, சமையல் எண்ணெய் ஏற்றுமதிக்கான தடை நீடிக்கும்-மத்திய அரசு
டெல்லி: விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த பருப்பு, சமையல் எண்ணெய் ஏற்றுமதிக்கான தடை நீடிக்கும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
மத்திய உணவு மற்றும் வேளாண்துறை அமைச்சர் சரத் பவார், திட்டக்கமிஷன் துணைத் தலைவர் மான்டேக் சிங் அலுவாலியா, கேபினட் செயலாளர் கே.எம்.சந்திரசேகரன் ஆகியோருடன் மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி நடத்திய ஆலோசனைகளுக்குப் பின் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
இது குறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், உணவுப் பொருட்களின் விலை ஏற்றுக்கொள்ள முடியாத அளவுக்கு உயர்ந்து வருகிறது. தற்போதைய பணவீக்க உயர்வுக்கு காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றின் விலை உயர்வே காரணம். குறிப்பாக, வெங்காய விலை உயர்வுக்கு காலதாமதமாக பெய்த மழையே காரணம். வேகமான பொருளாதார வளர்ச்சியாலும், மத்திய அரசின் பல் வேறு திட்டங்களாலும் ஏழைகளின் வருவாய் உயர்ந்துள்ளது. அதனால் அவர்கள் உணவு உட்கொள்வதும் அதிகரித்துள்ளது. இதுவே பால், முட்டை, மாமிசம், மீன் ஆகியவற்றின் விலை உயர்வுக்கு காரணம்.
பணவீக்கத்தை ஆய்வு செய்ய தலைமை பொருளாதார ஆலோசகர் கெளசிக் பாசு தலைமையில் அமைச்சகக் குழு அமைக்கப்படும். மேலும் விலைவாசி குறித்து கேபினட் செயலாளர் தலைமையிலான கமிட்டி, மாநில அரசுகளுடன் ஆலோசனை நடத்தும்.
விலை உயர்வை கட்டுப்படுத்தும் வகையில் பதுக்கல்காரர்கள், கள்ளச் சந்தையில் விற்பவர்கள் ஆகியோர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இதன் மூலம் சந்தைக்கு பொருட்கள் உரிய நேரத்தில் வருவதுடன் விலையும் குறையும். வியாபாரிகள் ரகசிய கூட்டணி அமைத்து, விலையை உயர்த்தும் போக்கும் கட்டுப்படுத்தப்படும். மாநில அரசுகளும் இந்த நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.
சமையல் எண்ணெய், பருப்பு, பாசுமதி அல்லாத அரிசி ஆகியவற்றின் ஏற்றுமதிக்கான தடை நீடிக்கும். அதே நேரத்தில் சமையல் எண்ணெய், பருப்பு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் கொள்முதலை தீவிரப்படுத்தி அவற்றை ரேஷன் கடைகள் மூலம் வழங்குமாறு பொதுத்துறை நிறுவனங்கள் கேட்டுக் கொள்ளப்படும்.
அதே போல மானிய விலையில் சமையல் எண்ணெய், பருப்பு விற்பனை தொடரும்.
சந்தைக்கு பொருட்களை சுமுகமாக வரச்செய்வதற்காக அத்தியாவசிய பொருட்கள் மீதான உள்ளூர் வரிகளை ரத்து செய்வது பற்றி மாநில அரசுகள் பரிசீலிக்க வேண்டும். அத்தியாவசிய பொருட்களின் ஏற்றுமதிக்கு கட்டுப்பாடுகளை விதிப்பதுடன் இறக்குமதிக்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும்.
நிலைமையை தொடர்ந்து கண்காணித்து சாதாரண மக்கள் பாதிக்கப்படாமல் பாதுகாப்போம் என்று கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications