பெட்ரோல் விலை உயர்வு: இது மக்களிடம் அரசு அடிக்கும் கொள்ளை- பாஜக
டெல்லி: பெட்ரோல் விலை உயர்வை ரத்து செய்ய வேண்டும் என்று பாஜக, இடதுசாரிகள் கோரியுள்ளன.
இது குறித்து பாஜக செய்தித் தொடர்பாளர் பிரகாஷ் ஜாவேத்கர் கூறுகையி்ல், கடந்த 6 மாதங்களில் ஏழாவது முறையாக பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இது, சாதாரண மனிதனிடம் கொள்ளை அடிக்கும் செயல். 30 ரூபாய் விலையுள்ள ஒரு பொருள் 60 ரூபாய்க்கு விற்கப்படுகிறது என்றால், அதற்கு 100 சதவீதம் வரி விதிக்கப்படுகிறது என்று தான் அர்த்தம்.
எண்ணெய் நிறுவனங்களின் நஷ்டத்தை சரிகட்டவே விலை உயர்வு என்று கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. அதற்கு இது சரியான வழியாகவும் தெரியவில்லை.
மேலும் டீசல் விலையும் உயர்த்தப்படலாம் என்று தெரிகிறது. இது மேலும் விலைவாசி உயர்வுக்கே வழிவகுக்கும் என்றார்.
அதே போல மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் இந்த விலை உயர்வை கடுமையாக கண்டித்துள்ளது. மக்களின் நலன் மீது மத்திய அரசுக்கு துளி கூட அக்கறையில்லை என்பதைத் தான் இந்த விலை உயர்வு காட்டுகிறது. இதை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடத்தப்படும் என்று அந்தக் கட்சி கூறியுள்ளது.












Click it and Unblock the Notifications