முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போல்..ஜெயலலிதா

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
சமீபத்தில் பெய்த கனமழை காரணமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் 1 லட்சத்து 27 ஆயிரம் ஹெக்டேர் நிலப் பரப்பில் பயிரிடப்பட்ட பயிர்கள் சேதமடைந்துள்ள சூழ்நிலையில், கண்துடைப்பிற்காக சுமார் 20 ஆயிரம் ஹெக்டேர் நிலப்பரப்பில் பயிரிடப்பட்ட பயிர்களுக்கு மட்டும் நிவாரண உதவி வழங்க நடவடிக்கை எடுத்து இருப்பதாகவும்,
அதுவும் அரசால் அறிவிக்கப்பட்ட ஒரு ஹெக்டேருக்கு ரூ. 10,000 என்பதற்குப் பதிலாக, வெறும் 30 விழுக்காடு நிவாரண உதவியை, அதாவது ஒரு ஏக்கருக்கு ரூ. 1,200 மட்டும் அளிக்க இருப்பதாகவும் அப்பகுதி விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
சென்ற ஆண்டு சேதமடைந்த பயிர்களுக்குக் கூட நிவாரண உதவி வழங்கப்படாமல் இருப்பது மற்றுமொரு வேதனை. இது மட்டுமல்லாமல், பூச்சிகளை கட்டுப்படுத்துவதற்குத் தேவையான பூச்சிக் கொல்லி மருந்துகள் உரிய நேரத்தில் விவசாயப் பெருமக்களுக்கு வழங்கப்படாததும், கால்வாய்களை சீரமைக்காததும் அதிக சேதம் ஏற்பட்டதற்குக் காரணம் என்றும் கூறப்படுகிறது.
உண்மை நிலை இவ்வாறு இருக்க, வெள்ள நிவாரணப் பணிகள் குறித்து மூன்று மணி நேரம் காணொலிக் காட்சி வாயிலாக முதல்வர் ஆய்வு நடத்தியதாகவும், நிவாரணப் பணிகள் குறித்து திருப்தி அடைந்ததாகவும் தமிழக அரசு செய்தி வெளியிட்டு இருப்பது முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போல் உள்ளது.
எனவே, கனமழை காரணமாக சேதமடைந்த பயிர்களுக்கு நிவாரண உதவிகளை வழங்காத அரசைக் கண்டித்தும், அரசின் அறிவிப்பிற்கு ஏற்ப உடனடியாக உரிய நிவாரணத் தொகையை வழங்க வலியுறுத்தியும், அதிமுக சார்பில், 19.1.2011 ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தாலுகா அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications