தேவகோட்டை: மனைவி, 2 குழந்தைகளை கொன்று புதைத்த கணவர்
தேவகோட்டை: தேவகோட்டை அருகே மனைவி, 2 குழந்தைகளை கணவரே கொலை செய்து உடல்களை வெவ்வேறு இடங்களில் புதைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையை அடுத்த கல்லல் அருகே உள்ள புரண்டி கிராமத்தை சேர்ந்த சூரியகாந்தி (37) தனது தாய் மாமன் மகளான மலர்விழியை (30) திருமணம் செய்திருந்தார். இந்தத் தம்பதிக்கு காயத்ரி (6), தாரணி (2) ஆகிய 2 மகள்கள்.
துபாயில் டெய்லராக வேலை பார்த்து வந்த சூரியகாந்தி சில ஆண்டுகளுக்கு முன் புரண்டி கிராமத்திற்கு திரும்பினார். அங்கேயே டெய்லராக தொழில் செய்து வந்தார்.
இந் நிலையில் மனைவியின் நடத்தையில் சூரியகாந்திக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்தது.
இந் நிலையில் சூரியகாந்தியின் வீடு கடந்த 2 நாட்களாக பூட்டிக் கிடந்தது. அவரது குடும்பத்தினரையும் காணவில்லை. இது குறித்து கல்லல் போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வந்தனர்.
சந்தேகப்பட்ட போலீசார் சூரிய காந்தியின் வீட்டை நேற்றிரவு உடைத்து உள்ளே சென்றபோது சூரியகாந்தி ஒரு மூலையில் அமர்ந்திருந்தார்.
அவரிடம் விசாரித்தபோது, மனைவி மற்றும் குழந்தைகளை எங்கே ஞாயிற்றுக்கிழமை கொலை செய்து உடல்களை வெவ்வேறு இடங்களில் புதைத்து விட்டதாகக் கூறினார்.
தனது வீட்டின் பின்புறம் மனைவி உடலை புதைத்து வைத்திருந்த இடத்தை சூரியகாந்தி அடையாளம் காட்டினார். அந்த உடல் மீட்கப்பட்டது. பின்னர் கல்லல்- சிவகங்கை ரோட்டில் உள்ள புதரில் கொன்று புதைக்கப்பட்ட குழந்தைகள் காயத்ரி, தாரணி ஆகியோரது உடல்களும் மீட்கப்பட்டன.
கைது செய்யப்பட்ட சூரியகாந்தியிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.












Click it and Unblock the Notifications