புல்மேடு வழியாக ஐயப்ப பக்தர்கள் செல்ல தடை விதிக்க உயர்நீதிமன்றம் யோசனை
ஜனவரி 14ம் தேதி இரவு வண்டிப்பெரியார் வனப்பகுதிக்குட்பட்ட புல்மேடு பகுதியில், ஏற்பட்ட ஆட்டோ-ஜீப் மோதல் மற்றும் அதைத் தொடர்ந்து ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 100க்கும் மேற்பட்ட ஐயப்ப பக்தர்கள் உயிரிழந்தனர். நாட்டையே பெரும் சோகத்தில் ஆழ்த்தியது இந்த சம்பவம்.
இச்சம்பவம் குறித்து கேரள உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்குப் பதிவு செய்துள்ளது. இந்த வழக்கை கடந்த திங்கள்கிழமை விசாரித்த நீதிபதிகள் தோட்டத்தில் ராதாகிருஷ்ணன் மற்றும் கோபிநாதன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச், கேரள காவல்துறை, வனத்துறை மற்றும் திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு ஆகியவற்றை கடுமையாக கண்டித்தது.
மூன்று பேரும் ஒருங்கிணைந்து செயல்படவில்லை. செயல்பட்டிருந்தால் இது நடந்திருக்காது. மேலும், இந்த கோர்ட் ஏற்கனவே பக்தர்கள் பாதுகாப்புக்காக பரிந்துரைத்த எதையும் இவர்கள் பின்பற்றவில்லை. இதுவும் விபத்துக்கு முக்கிய காரணம். எனவே பக்தர்கள் பாதுகாப்புக்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும், எப்படி இந்த விபத்து நடந்தது என்பது குறித்தும் வியாழக்கிழமைக்குள் விளக்கம் தர வேண்டும் என உத்தரவிட்டிருந்தது.
இதையடுத்து இன்று கேரள காவல்துறை மற்றும் தேவஸ்வம் போர்டு சார்பில் பதில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. காவல்துறை சார்பில் டிஜிபி ஜேக்கப் புன்னூஸ் பதில் மனுவைத் தாக்கல் செய்தார்.
டிஜிபி ஜேக்கப் புன்னூஸ் தாக்கல் செய்திருந்த அறிக்கையில், பக்தர்களுக்கு சொந்தமான ஆட்டோவும், ஜீப்பும் மோதிக்கொண்டதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டு விபத்து ஏற்பட்டுள்ளது. போதிய போலீஸ் பாதுகாப்பு இல்லாதது சபரிமலை விபத்துக்கு காரணம்.
விபத்து நிகழ்ந்த புல்மேட்டில் 279 போலீசார் மட்டுமே பணியில் இருந்தனர். விபந்து நடந்த பகுதி வனத்துறைக்கு சொந்தமானது. ஆனால் வனத்துறை சார்பில் பாதுகாப்பு கோரிக்கை விடுக்கப்படவில்லை. அதிக எண்ணிக்கையிலான வாகனங்கள் அனுமதிக்கப்பட்டதும் விபத்திற்கு காரணம் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இருப்பினும் கேரள அரசு மற்றும் தேவஸ்வம் போர்டு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுக்கள் பெஞ்சுக்குத் திருப்தியைத் தரவில்லை. இதையடுத்து உங்களால் பக்தர்களுக்கு உரிய பாதுகாப்பை அளிக்க முடியாவிட்டால், அந்தப் பாதையை (புல்மேடு) யாரும் பயன்படுத்தாமல் தடுக்கவாவது செய்யுங்கள் என்று கண்டிப்புடன் கூறினர் நீதிபதிகள்.
புல்மேடு பாதை கிட்டத்தட்ட 27 கிலோமீட்டர் தொலைவுக்கு உள்ளது. ஆனால் பாதையின் அகலம் வெறும் 4 மீட்டராக மட்டுமே உள்ளது.இப்படிப்பட்ட பாதையில் பல லட்சம் பேர் சென்றால் எப்படி பாதுகாப்பு உத்தரவாதம் இருக்கும் என்றும் நீதிபதிகள் கேட்டனர்.
பக்தர்களுக்குத் தேவையான பாதுகாப்பு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைளை மேற்கொள்ள அரசால் முடியாவிட்டால், இந்தப் பாதையை பக்தர்கள் பயன்படுத்தாமல் தடுக்கலாம்.
இந்த குறுகலான பாதையில் ஆயிரக்கணக்கான வாகனங்களை அனுமதித்துள்ளீர்கள். இது ஏன் என்பதை விளக்க வேண்டும். மேலும் இப்பகுதியில் ஏராளமான கடைகளும் போடப்பட்டுள்ளன. இந்தக் கடைகளுக்கு யார் அனுமதி கொடுத்தது என்பதை கோர்ட்டுக்குத் தெரிவிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.













Click it and Unblock the Notifications