தமிழக மீனவர்கள் மீது மீண்டும் இலங்கை கடற்படை தாக்குதல்: மது பாட்டில்கள் வீசி ரகளை
நாகை: தமிழக மீனவர்கள் மீது மீண்டும் இலங்கை கடற்படை தாக்குதல் நடத்திய சம்பவம் தமிழக மீனவர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாகை மாவட்டம் ஆறுகாட்டுத்துறையைச் சேர்ந்த 12 மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றுள்ளனர்.
அவர்கள் கோடியக்கரை அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் அவர்களை சுற்றி வளைத்துள்ளனர். பின்னர் அவர்கள் மீது காலி மது பாட்டில்களைத் தூக்கி எறிந்துள்ளனர்.
சிறிது நேரம் அவர்கள் மீது சரமாரியாக பாட்டில்களை எறிந்த பிறகு திரும்பிச் சென்றுவிட்டனர். இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றாலும் மீனவர்களின் வலைகள் சேதம் அடைந்தன. இதையடுத்து அந்த மீனவர்கள் கரை திரும்பினர்.
இது குறித்து பாதிக்கப்பட்ட மீனவர்கள் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் புகார் அளித்தனர்.
கடந்த 12-ம் தேதி ஜெகதாப்பட்டினத்தைச் சேர்ந்த மீனவர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார். அந்த சம்பவம் நடந்து ஒரு வாரத்திற்குள் தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளனர். இது தமிழக மீனவர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications