எடியூரப்பா மீது ஊழல் வழக்கு தொடர ஆளுநர் அனுமதி... பாஜக கடும் அதிர்ச்சி!

ஷிமோகாவை சேர்ந்த வழக்கறிஞர்கள் சிரஜின்பாஷா மற்றும் கே.என்.பால்ராஜ் ஆகியோர் கடந்த 2010 டிசம்பர் 28-ம் தேதி ஆளுநர் பரத்வாஜை சந்தித்து, முதல்வர் எடியூரப்பா, உள்துறை அமைச்சர் ஆர்.அசோக் இருவர் மீதும் ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக வழக்குத் தொடர அனுமதி அளிக்குமாறு மனு அளித்திருந்தனர்.
இதற்கு ஆதாரமாக ஆயிரம் பக்கங்களைக் கொண்ட ஆவணங்களையும் புகார் மனுவுடன் இணைத்திருந்தனர்.
முதல்வர், உள்துறை அமைச்சர் ஆகியோர் மீது வழக்குத் தொடர அனுமதி வழங்குவது பற்றி ஆளுநர் பரிசீலித்து வந்த நிலையில், இந்த நடவடிக்கையை கைவிடுமாறு கோரி கடந்த 19-ம் தேதி அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி, அதை ஆளுநருக்கு கடிதம் மூலம் எடியூரப்பா தெரிவித்திருந்தார்.
இந்த விவகாரத்தில் ஆளுநர் மற்றும் முதல்வர் இடையே பனிப்போர் நடந்து வருகிறது.
இந்நிலையில், ஆளுநரை திரும்ப பெறுமாறு வலியுறுத்தி சனிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்த பாஜக முடிவு செய்துள்ளது.
இந்த பரபரப்பான சூழ்நிலையில், ஊழல் தடுப்பு சட்டம், 1988 பிரிவு 19 (1) மற்றும் குற்றவியல் நடைமுறைச் சட்டம், 1973 பிரிவு 197ன் கீழ் முதல்வர், உள்துறை அமைச்சர் மீதான ஊழல் புகார் தொடர்பாக உரிய நீதிமன்றத்தில் வழக்குத் தொடர இரு வழக்கறிஞர்களுக்கும் அனுமதி அளித்து ஆளுநர் வெள்ளிக்கிழமை மாலை உத்தரவு பிறப்பித்துள்ளார்.
முன்னதாக, முதல்வர் மீது வழக்குத் தொடர அனுமதிப்பது தொடர்பான நடவடிக்கையை கைவிடுமாறு கோரும் அமைச்சரவை தீர்மானத்தை ஆளுநர் நிராகரித்தார்.
முதல்வர் மீது வழக்குத் தொடர ஆளுநர் அனுமதி அளித்துள்ளதால் பாஜக அதிர்ச்சியடைந்துள்ளது. இந்த விவகாரம் கர்நாடக அரசியலில் திடீர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications