இலங்கைத் தூதரகம் முற்றுகை: விடுதலைச் சிறுத்தை கட்சியினர் 500 பேர் கைது!

தமிழக மீனவர்கள் தொடர்ந்து சிங்களக் கடற்படையால் படுகொலை செய்யப்பட்டு வருகின்றனர். கடந்த 10 நாட்களுக்குக்குள் 2 மீனவர்கள் படுகோரமாக இலங்கை கடற்படையால் கொல்லப்பட்டுள்ளனர். இதனைக் கண்டித்தும், தமிழின விரோத நடவடிக்கைகளில் இலங்கை அரசுக்குத் துணைபோகும் இந்திய அரசைக் கண்டித்தும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் இலங்கைத் தூதரத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் சிந்தனை செல்வன் தலைமையில் ஆழ்வார் பேட்டை டி.டி.கே.சாலையில் உள்ள இலங்கை தூதரக அலுவலகத்தை திடீர் என்று முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். அப்போது இலங்கை அரசை கண்டித்தும், மத்திய அரசுக்கு எதிராகவும் கோஷமிட்டனர்.
“தடுத்து நிறுத்து தடுத்து நிறுத்து மீனவர் படுகொலையை தடுத்து நிறுத்து
அப்புறப்படுத்து அப்புறப்படுத்து இலங்கை தூதரகத்தை அப்புறப்படுத்து"
என முழக்கமிட்டனர் தொண்டர்கள்.
ராஜபக்சே கொடும்பாவி எரிப்பு:
இலங்கை அதிபர் ராஜபக்சே கொடும்பாவியும் எரிக்கப்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக துணை போலீஸ் கமிஷனர் பெரியய்யா தலைமையில் போலீசார் விரைந்து சென்று தீயை அணைத்தனர்.
தூதரக அலுவலகத்துக்குள்ளும் தொண்டர்கள் நுழைய முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.
முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் முகமது யூசுப், வன்னியரசு, இளஞ் செழியன், மடிப்பாக்கம் வெற்றிசெல்வன், செ.குவேரா, சைதை பாலாஜி, கோட்டைகாடு துரை, வேந்தன், துரை, இரா.செல்வம், கிட்டு உள்பட 400-க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டனர். அனைவரையும் போலீசார் வேனில் ஏற்றிச் சென்றனர்.
இதையடுத்து மத்திய சென்னை மாவட்ட செயலாளர் வீரமுத்து தலைமையில் 50 பேர் இலங்கை தூதரகம் நோக்கி சென்றனர். எதிர்பாராத விதத்தில் இது நடந்ததால் போலீசார் அவர்களை விரட்டிச்சென்று கைது செய்தனர்.
இந்த போராட்டத்தை தொடர்ந்து இலங்கை தூதரகம் அமைந்துள்ள சாலை மூடப்பட்டன. வாகனங்கள் வேறு வழியாக திருப்பி விடப்பட்டன. அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications