சென்னை-இலங்கை மகாபோதி சங்கம் மீது தாக்குதல்-பிக்குகள் ஐவர் காயம்
சென்னை: சென்னை எழும்பூரில் உள்ள சிங்களர்களால் நடத்தப்படும் இலங்கை மகாபோதி சங்கத்தில் நேற்று இரவு திடீரென சிலர் புகுந்து சரமாரியாக
தாக்குதல் நடத்தினர். இதில் புத்த பிக்குகள் உள்பட ஐவர் காயமடைந்தனர்.
எழும்பூர் கென்னத் லேனில், சிங்களர்களின் மகாபோதி சங்கம் உள்ளது. இந்த சங்கத்திற்கு இலங்கை அரசு நிதியுதவி செய்கிறது.இங்கு ஒரு புத்தர் கோவிலையும் வைத்துள்ளனர்.
இங்கு இலங்கையைச் சேர்ந்தவர்கள் தவிர நேபாள நாட்டினரும் வருவார்கள். நேற்று இரவு இங்கு திடீரென பத்துக்கும் மேற்பட்டோர் வந்தனர்.உள்ளே வந்தவர்கள், சரமாரியாக கல்வீசி தாக்குதலில் ஈடுபட்டனர். இதில் அலுவலக கண்ணாடி, கோவிலுக்குள் இருந்த கண்ணாடி,டிவி உள்ளிட்டவை உடைந்து சிதறின.
கல்வீச்சில், புத்த பிக்குகள் மைதிலி, சமீத தேரா, வஜ்ர தேரா உள்ளிட்ட ஐவர் காயமடைந்தனர். அவர்களையும் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் தாக்கினர். இதையடுத்து அவர்கள் அலறியடித்தபடி உள்ளே ஓடினர். மேலும் உள்ளே சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்களும் அலறி அடித்து ஓடினர்.
பின்னர் தாக்குதல் நடத்தியவர்கள் தப்பி விட்டனர். இந்த சம்பவம் குறித்து போலீஸாருக்குத் தகவல் போனது. அதேபோல இலங்கை துணைத் தூதரகத்திற்கும் தகவல் போனது. இதையடுத்து போலீஸார் விரைந்து வந்தனர். ஆனால் அவர்களால் தாக்குதலில் ஈடுபட்டவர்களைப் பிடிக்க முடியவில்லை.
சம்பவத்தைத் தொடர்ந்து போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
இலங்கை கடற்படை கடந்த பத்து நாட்களில் 2 தமிழக மீனவர்களை கொடூரமாகக் கொன்றுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் கொதிப்பான நிலை நிலவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கு. இந்தப் பின்னணியில் இந்த தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது.












Click it and Unblock the Notifications