தூத்துக்குடி துறைமுகத்திற்கு வ.உ.சிதம்பரனார் பெயர்
டெல்லி: தூத்துக்குடி துறைமுகத்திற்கு கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் பெயர் சூட்டப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்கான உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் சட்டசபைத் தேர்தல் வேகமாக நெருங்கி வருகிறது. இதனால் வாக்கு வங்கிகளை தக்க வைக்கும் முயற்சியில் மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக இறங்கியுள்ளன.
சமீபத்தில் சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு ராஜீவ் காந்தி பெயர் சூட்டப்படும் என தமிழக அரசு அறிவித்தது. இந்தநிலையில் தூத்துக்குடி துறைமுகத்திற்கு கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் பெயர் சூட்டப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
வெள்ளையர்களுக்கு எதிராக தீவிரமாக போராடியவர் வ.உ.சி. என அன்புடன் அழைக்கப்பட்ட சிதம்பரனார். தனது சொத்துக்கள் அனைத்தையும் விற்று கப்பல் வாங்கி சுதேசிக் கப்பலை இயக்கி சாதனை படைத்தவர். வெள்ளையர் அரசால் இரட்டை ஜென்ம தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு செக்கிழுக்க வைக்கப்பட்டார்.
பெரும் செல்வந்தர் குடும்பத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் நாட்டு விடுதலைக்காக அனைத்து சொத்துக்களையும் விற்று போராடி மறைந்தவர் வ.உ.சி.
இவரது பெயரை தூத்துக்குடி துறைமுகத்திற்கு வைக்க வேண்டும் என்று நீண்ட காலமாக கோரிக்கை வைக்கப்பட்டு வந்தது. ஆனால் இத்தனை காலமாக அமைதியாக இருந்து வந்த மத்திய அரசு தற்போது அவரது பெயரை சூட்டுவதாக அறிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications