மார்ச் 1ம் தேதி சட்டசபைத் தேர்தல் தேதி அறிவிக்கப்படலாம்-பிரவீன் குமார்
விழுப்புரம்: தமிழக சட்டசபைத் தேர்தலுக்கான தேதி மார்ச் 1ம் தேதி வெளியாகலாம் என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீன் குமார் கூறியுள்ளார்.
விழுப்புரம் வந்த அவர் அங்கு மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களைப் பார்வையிட்டு ஆய்வு நடத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,
சட்டசபைத் தேர்தல் தேதி மார்ச் 1ம் தேதி அறிவிக்கப்படக் கூடும். நாங்கள் தேர்தல் நடத்துவதற்குத் தயார் நிலையில்தான் உள்ளோம்.
அங்கீகரிக்கப்பட்ட வாக்குப் பதிவு இயந்திரங்கள் 1.35 லட்சம் தமிழகத்துக்கு வந்துள்ளது. இதில் விழுப்புரம் மாவட்டத்துக்கு 2,520 கன்ட்ரோலிங் யூனிட்டும், 9 ஆயிரம் பேலட் யூனிட்டும் என மொத்தம் 11,520 இயந்திரங்கள் வந்துள்ளன.
மீதமுள்ள இயந்திரங்கள் ஓரிரு நாள்களில் வந்துவிடும். அரசியல் கட்சியினர் முன் இந்த இயந்திரங்கள் அடுத்த வாரம் சோதனையிடப்படும். இதில் 10 சதவீத வாக்குகள் பதிவு செய்யப்பட்டு, அவை சரியாக பதிவாகிறதா என்று சோதிக்கப்படும். இதேபோல் தேர்தலுக்கு முன்பும் ஒருமுறை சோதிக்கப்படும்.
வாக்காளித்தவர்களுக்கு ரசீது கிடைக்க செய்வதில் நடைமுறை சிக்கல்கள் உள்ளன. இருப்பினும் இதற்காக அமைக்கப்பட்டுள்ள குழுவின் பரிந்துரை கிடைத்ததும் அதற்குத் தகுந்தபடி நடவடிக்கை இருக்கும்.
வாக்காளர் அடையாள அட்டை வழங்கும் பணி 99 சதவீதம் நிறைவு பெற்றுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் 100 சதவீதம் வழங்கப்பட்டுள்ளது. வாக்காளர் அடையாள அட்டை தொலைந்து போனவர்கள், சேதமடைந்தவர்களுக்காக பிப்ரவரி மாதம் சிறப்பு முகாம் நடத்தப்படும். இதில் உரிய ஆவணங்களை தாக்கல் செய்து புதிய வாக்காளர் அடையாள அட்டை பெறலாம்.
வாக்காளர் அடையாள அட்டை இல்லை என்பதற்காக வாக்களிக்கும் உரிமையை மறுக்க முடியாது. எனவே புகைப்படம் ஒட்டிய அடையாள அட்டை மற்றும் 13 ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை காட்டி வாக்களிக்கலாம்.
தேர்தல் செலவு சட்டப்பேரவைக்கு ரூ.10 லட்சமும், மக்களவை தேர்தலுக்கு ரூ.25 லட்சமும் இருக்கலாம். கட்சித் தலைவர்கள் பிரசாரத்தில் கலந்து கொள்ளும்போது வேட்பாளரின் பெயரை குறிப்பிட்டோ, அவரை மேடையில் அறிமுகப்படுத்தியோ பேசினால் அந்த கூட்ட செலவு வேட்பாளரின் கணக்கில் சேர்க்கப்படும்.
முகவரி மாறிச் சென்றவர்கள் புதிய இடத்திலும் வாக்காளராக சேர்த்துள்ளதும், இரு தொகுதிகளில் வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ளது குறித்தும் ஆய்வு செய்து 50 ஆயிரம் வாக்காளர்கள் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன என்று கூறினார்.












Click it and Unblock the Notifications