பங்கு சந்தை சரிவு: மூன்று மாதங்களில் ரூ.11லட்சம் கோடி இழப்பு!

இதில், அதிகபட்சமாக, கடந்த மூன்று நாட்களில் மட்டுமே ரூ.3 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.
பணவீக்கம் உள்ளிட்ட காரணங்களால் பங்கு சந்தை வணிகத்தில் கடும் சரிவு காணப்படுகிறது. கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகை முதல் இந்த ஜனவரி வரை முதலீட்டாளர்களுக்கு ரூ.11 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களில் பங்கு சந்தை குறியீட்டு எண் 755 புள்ளிகள் சரிவு கண்டுள்ளது.கடந்த வெள்ளிக்கிழமை மட்டும் இதுவரை இல்லாத அளவாக பங்கு சந்தை குறியீட்டு எண் 288 புள்ளிகள் சரிந்தது. இதனால் அன்று ஒரு நாளில் மட்டும் முதலீட்டாளர்களுக்கு 1.32 கோடி லட்சம் இழப்பு ஏற்பட்டது.
கடந்த ஆண்டு நவம்பர் 5 ந்தேதி தீபாவளி பண்டிகையன்று பங்கு வணிக குறியீட்டு எண் 21,004.96 புள்ளிகளாக உயர்ந்து புதிய உச்சத்தைத் தொட்டது. அதன்பின், பங்கு வணிகத்தில் ஏற்பட்டு வரும் தொடர் வீழ்ச்சி காரணமாக குறியீட்டு எண் 2600 புள்ளிகள் சரிவடைந்து தற்போது 18,395.97 புள்ளிகளாக உள்ளது.
இதுகுறித்து பங்கு சந்தை நிபுணர் ஒருவர் கூறுகையில், "கடந்த சில மாதங்களாக பங்கு சந்தையில் ஏற்பட்டுள்ள சரிவை தொடர்ந்து, முதலீட்டாளர்கள் நம்பிக்கை இழந்து பெருமளவில் பங்குகளை விற்க துவங்கியுள்ளனர். இதனால் பங்கு வணிகத்தில் முன்னேற்றம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைந்துள்ளன.
கடந்த 2009ம் ஆண்டு மத்தியில் 50,000 கோடி ரூபாயாக இருந்த பங்கு சந்தை வர்த்தகம் தற்போது 15,000 கோடி ரூபாயாக சரிவு கண்டுள்ளது.
பங்கு சந்தை பட்டியலில் இடம்பெற்றுள்ள 50 முக்கிய நிறுவனங்களில், எச்சிஎல் டெக், டிசிஎஸ், சேசா கோவா மற்றும் பவர்கிரிட் ஆகிய நான்கு நிறுவனங்களின் பங்குகளின் மதிப்பு மட்டும் கடந்த ஒரு மாதமாக சிறிது முன்னேற்றம் கண்டு வருகிறது. இது ஆறுதல் தரக்கூடிய விஷயமாக உள்ளது," என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications