ரங்கசாமியுடன் அதிமுக தலைவர்கள் சந்திப்பு-முறைப்படி கூட்டணிக்கு அழைப்பு
புதுச்சேரி: அதிமுக கூட்டணியில் இணையுமாறு கோரி புதுச்சேரி முன்னாள் முதல்வரும், சமீபத்தில் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகியவருமான ரங்கசாமியை நேரில் சென்று அதிமுக தலைவர்களான தம்பித்துரையும், செம்மலையும் அழைத்துள்ளனர். ஜெயலலிதாவுடன் பேச்சு நடத்துமாறும் அவர்கள் கேட்டுக் கொண்டனர்.
ரங்கசாமி சமீபத்தில் காங்கிரஸ் கட்சியிலிருந்தும், எம்.எல். ஏ. பதவியிலிருந்தும் விலகினார். தனிக் கட்சி தொடங்கப் போவதாகவும் அவர் கூறியுள்ளார். இந்த நிலையில் அவரை தங்களது அணிக்கு இழுக்க அதிமுக தீவிரமாக உள்ளது.
இந்த நிலையில் நேற்று அதிமுக எம்.பிக்களான செம்மலையும், தம்பித்துரையும் புதுச்சேரி சென்று ரங்கசாமியை சந்தித்துப் பேசினர். அவர்களுடன் புதுவை அதிமுக மாநிலச் செயலாளரும் எம்எல்ஏவுமான அன்பழகன், எம்.எல்.ஏக்கள் ஓம் சக்தி சேகர், ஓமலிங்கம், புதுச்சேரி அதிமுக அவைத் தலைவர் பாண்டுரங்கன் ஆகியோரும் உடன் இருந்தனர்.
ரங்கசாமியிடம், அதிமுக கூட்டணிக்கு வருமாறும், இதுதொடர்பாக ஜெயலலிதாவை சந்தித்துப் பேச்சு நடத்துமாறும் அவர்கள் கேட்டுக் கொண்டனர்.
விரைவில் இதுதொடர்பாக ரங்கசாமி முடிவெடுப்பார் என்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications