விசாரணைக்கு பயந்து போலீஸ் ஏட்டு தற்கொலை: போலீசார் விசாரணை
நாகர்கோவில்: கருங்கல் அருகே போலீஸ் ஏட்டு விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். விசாரணைக்கு பயந்து தான் தற்கொலை செய்து கொண்டதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
கருங்கல் அருகே உள்ள பாலபள்ளம் நடுப்பிடாகத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணபிள்ளை. அவர் ஆரல்வாய்மொழி காவல் நிலையத்தில் ஏட்டாக பணிபுரிந்து வந்தார்.
இந்நிலையில் நேற்று கிருஷ்ணபிள்ளை வீட்டில் விஷம் குடித்த நிலையில் மயங்கிக் கிடந்தார். உடனடியாக அவரை உறவினர்கள் குளச்சலில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனில்லாமல் பரிதாபமாக இறந்தார்.
தற்கொலை செய்து கொண்ட ஏட்டு கிருஷ்ணபிள்ளைக்கு கஸ்தூரி பாய் என்ற மனைவியும், அரிகரன், ராமகிருஷ்ணன் ஆகிய இரண்டு மகன்களும் உள்ளனர். இதில் அரிகரன் போலீஸ்காரராக பணிபுரிந்து வருகிறார்.
போலீஸ் ஏட்டு கிருஷ்ணபிள்ளை விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக கருங்கல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் ஏட்டு கிருஷ்ணபிள்ளை தற்கொலை செய்து கொண்டது ஏன் என்பது குறித்து பல்வேறு தகவல்கள் கூறப்படுகின்றன. குமரி மாவட்டத்தில் உள்ள சோதனைச் சாவடிகளில் பணிபுரியும் போலீசார் மீது சமீப காலமாக பல்வேறு புகார்கள் மேலதிகாரிகளுக்கு வந்தன.
இதனையடுத்து புகாரில் சிக்கிய போலீசாரை அழைத்து உரிய விசாரணை நடத்த மாவட்ட உயர் போலீஸ் அதிகாரிகள் முடிவு செய்தனர். இதன்படி நேற்று காலை நாகர்கோவிலில் உள்ள போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு கிருஷ்ணபிள்ளை உள்பட 5 போலீஸ்காரர்களை விசாரணைக்கு அழைத்து இருந்தனர். இதில் 4 பேர் மட்டுமே வந்து இருந்தனர். கிருஷ்ணபிள்ளை வரவில்லை.
இந்நிலையில் கிருஷ்ணபிள்ளை வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதனால் போலீஸ் உயரதிகாரிகள் விசாரணைக்கு பயந்துதான் அவர்கள் தற்கொலை செய்து இருக்கலாம் என கூறப்படுகிறது. மேலும் விசாரணை நடக்கிறது.