முதல்வர்கள் மாநாட்டில் ப.சிதம்பரத்துடன் நரேந்திரமோடி மோதல்: சரமாரி புகார்
டெல்லி: வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கறுப்புப் பணத்தை இந்தியாவுக்கு கொண்டு வர மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்று முதல்வர்கள் மாநாட்டில் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி குற்றம் சாட்டினார். அவருக்கும் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்திற்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
டெல்லியில் உள்நாட்டு பாதுகாப்பு குறித்து முதல்வர்கள் மாநாடு நடைபெற்றது. இதில் கலந்து கண்ட குஜராத் முதல்வர் நரேந்திர மோடி பேசியதாவது,
நக்சலைட்டுகள், தீவிரவாதிகள், சமூக விரோதிகளை ஒடுக்க மாநில அரசுகளுக்கு மத்திய அரசு கட்டளையிடுகிறது. ஆனால் தீவிரவாதிகளிடம் உள்ள ஆயுதங்களுக்கு இணையானவற்றை மாநில போலீசாரால் வாங்க முடியவில்லை.
ஆஸ்திரியா, ஜெர்மனி போன்ற நாடுகள் காஷ்மீர், ஆந்திரா, ஒரிசா, பஞ்சாப், குஜராத் ஆகிய மாநிலங்களுக்கு குறிப்பிட்ட வகை ஆயுதங்கள் வழங்க மறுக்கின்றன. இதற்கு மத்திய அரசும் ஒழுங்கான நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டினார்.
அதற்கு உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் கூறியதாவது,
இது குறித்து தக்க நடவடிக்கை எடுத்து தான் இருக்கிறோம். அதே நேரத்தில் துருக்கி, ரஷ்யா, இத்தாலி, அமெரிக்கா போன்ற நாடுகளிடம் இருந்து அதே தரமான ஆயுதங்களை வாங்கிக் கொள்ளலாம் என்று கடிதமும் எழுதி இருக்கிறோம் என்றார்.
அப்போது மோடி குறுக்கிட்டு,
மாவோயிஸ்டுகளை கட்டுப்படுத்தி விட்டதாக கூறுகிறீர்கள். ஆனால் மாவோஸ்டுகளின் ஆதிக்கமும், தாக்குதல்களும் அதிகரித்த வண்ணம் உள்ளன.
அவர்களால் ஏராளமான போலீசாரும், மக்களும் கொல்லப்பட்டுள்ளனர். அவர்கள் சக்தி வாய்ந்த ஆயுதங்கள் வைத்திருக்கின்றனர் என்றார்.
அதற்கு சிதம்பரம் பதிலளிக்கையில்,
மாவோயிஸ்ட்கள் ஆதிக்கம் உள்ள மாநிலங்களில் அவர்கள் ஒடுக்கப்பட்டு தான் வருகிறார்களே தவிர முன்னேறவில்லை என்றார்.
உடனே மோடி வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கறுப்புப் பணத்தை இந்தியாவுக்கு கொண்டு வர மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றார். அதற்கு சிதம்பரம் இது உள்நாட்டு பாதுகாப்பு குறித்த மாநாடு அதனால் கறுப்புப் பணத்தை பற்றி தற்போது பேச வேண்டாம் என்று கூறினார்.












Click it and Unblock the Notifications