கச்சத்தீவு-தமிழர்களின் உரிமையை நிலைநாட்ட புதிய ஒப்பந்தம்: திமுக கோரிக்கை

இன்று முதல்வர் கருணாநிதி தலைமையில் நடந்த திமுக பொதுக் குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில்,
இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து சித்ரவதை செய்யப்பட்டும், படுகொலை செய்யப்பட்டும், மீன்பிடி வலைகள் சிதைக்கப்பட்டும், தமிழக மீனவர்களால் பிடிக்கப்பட்ட மீன்கள் கொள்ளையடிக்கப்படுவதுமான நடவடிக்கைகளின் உச்சக்கட்டமாக சில நாட்களுக்கு முன்பு வேதாரண்யம் பகுதி புஷ்பவனம் கிராமத்தைச் சேர்ந்த ஜெயக்குமார் இலங்கை கடற்படையினரால் கோரமாக படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்த கொடுஞ்செயலுக்கு இலங்கை கடற்படையினர் காரணம் அல்ல என்று வாதிடும் இலங்கை அரசுக்கு திமுக பொதுக்குழு வன்மையான கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறது.
இதையடுத்து முதல்வர் கருணாநிதி மேற்கொண்ட நடவடிக்கைகளால், வெளியுறவுத்துறை செயலாளர் நிருபமா ராவ், இலங்கை அதிபர் ராஜபக்சேவை சந்தித்து மீனவர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண பேச்சுவார்த்தை நடத்தினார்.
வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா டெல்லியில் முதல்வர் கருணாநிதி சந்தித்தப்போது, அவ்வப்போது சுமூக முடிவுகள் மேற்கொள்வதற்காக இருதரப்பையும் சேர்ந்த கூட்டுக்குழு நியமிக்க இலங்கை அரசு ஒப்புக்கொண்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
தமிழக மீனவர்களின் நலனையும், பாதுகாப்பையும் நிரந்தரமாக தொடரச் செய்யும் வகையில், கச்சத் தீவில் தமிழக மீனவர்களுக்கு உள்ள உரிமைகளை நிலைநாட்டும் வகையில் புதிய ஒப்பந்தம் ஒன்று இலங்கையுடன் போடப்பட வேண்டும் என இப்பொதுக்குழு மத்திய அரசை வலியுறுத்துகிறது.
இலங்கை தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு அளிப்பதே நிரந்தர சக வாழ்வுக்கு வழிவகுத்திடும் என்பதால், அரசியல் தீர்வுகாண அனைத்து முயற்சிகளையும் மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
மேலும், மாநிலகத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி என்ற தத்துவம் வலுப்பெறும் வகையில், இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வர வேண்டும்.
நாடாளுமன்றத்தில் மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்றி மகளிருக்கான இட ஒதுக்கீடு கனவை நனவாக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்பட 21 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.












Click it and Unblock the Notifications