காங். சேவாதளத்திற்கு 5 தொகுதிகள் வழங்க சோனியாவிடம் கோரிக்கை
நெல்லை: வரும் சட்டசபை தேர்தலி்ல் காங். சேவாதளத்திற்கு 5 தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என சோனியா காந்தியிடம் வலியுறுத்தவிருப்பதாக மாநில சேவா தள தலைமை அமைப்பாளர் செல்வராஜன் தெரிவித்தார்.
இது குறித்து செல்வராஜன் நிருபர்களிடம் கூறியதாவது,
தமிழ்நாடு காங்கிரஸ் சேவாதளத்தில் ஒரு லட்சத்து 75 ஆயிரம் பேர் உறுப்பினர்களாக உள்ளனர். சேவாதள உறுபபினர்கள் 234 சட்டசபை தொகுதியில் உள்ள ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் பொறுப்பாளர்களை வரும் மார்ச் மாதம் 15-ம் தேதிக்குள் நியமிக்க உள்ளனர். தேர்தல் பணியாற்ற சென்னை, மதுரை, திருச்சி, நெல்லை, சேலம், வேலூர், கோவை என 7 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. இந்த மண்டலங்களுக்கான பொறுப்பாளர்களாக தலா 4 மாநில நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தமிழக காங்கிரஸ் சேவாதள சிறப்பு பிரதிநிதிகள் மாநாடு சென்னை, தேனாம்பேட்டையில் உள்ள காங்கிரஸ் மைதானத்தில் வரும் மார்ச் 6-ம் தேதி நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் சுமார் 6 ஆயிரம் சேவாதள பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளனர். மேலும் வரும் மார்ச் 15-ம் தேதிக்குள் மாவட்ட வாரியாக மத்திய அரசின் சாதனையை விளக்கி தெருமுனை பிரச்சாரம் செய்ய உள்ளனர். வரும் சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் சேவாதளத்திற்கு 5 தொகுதிகளை ஒதுக்க காங்கிரஸ் தலைவி சோனியாவிடம் வலியுறுத்துவோம் என்றார்.












Click it and Unblock the Notifications