இஸ்ரோவின் இமாலய ஸ்பெக்ட்ரம் ஊழல்-பிரதமர் வாய் திறக்க மறுப்பது ஏன்?-ஜெயலலிதா கேள்வி

Subscribe to Oneindia Tamil

Jayalalitha
சென்னை: பிரதமரின் நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் வருகின்ற முக்கியமான துறையான விண்வெளித் துறையைச் சேர்ந்த இந்த இஸ்ரோ இமாலய ஊழல் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஆனால், இது குறித்து பொருளாதார வல்லுநரான பிரதமர் வாய் திறக்காமல் ஊழலுக்கு உடந்தையாக எப்படி இருக்கிறார் என்று எனக்கு புரியவில்லை என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: மதிப்புமிக்க, அரிதான 70 மெகாஹெர்ட்ஸ் எஸ்-பேண்ட் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு மூலம் இந்திய நாட்டிற்கு 2 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது என்று ஊடகங்களில் வந்துள்ள செய்தி மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது.

மொபைல் பிராட்பேண்ட் சேவையை 20 ஆண்டுகளுக்கு எந்த விதக் கட்டுப்பாடும் இல்லாமல் பயன்படுத்திக் கொள்ளும் வகையில், 70 மெகாஹெர்ட்ஸ் எஸ்-பேண்ட் அலைக்கற்றை பெங்களூரைச் சேர்ந்த தேவாஸ் மல்டிமீடியா என்ற தனியார் நிறுவனத்திற்கு அடிமாட்டு விலையான வெறும் 1000 கோடி ரூபாய்க்கு அளிக்கப்பட்டு இருக்கிறது என்று அந்தச் செய்தி தெரிவிக்கிறது.

இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் வணிகப் பிரிவான ஆன்ட்ரிக்ஸ் கார்ப்பரேஷன் லிமிடெட் என்கிற நிறுவனம் இந்த அலைக்கற்றையை தனியார் நிறுவனத்திற்கு விற்றுள்ளது.

இருப்பினும், ஜிசாட் 6, ஜிசாட் 6ஏ ஆகிய இரண்டு செயற்கைகோள்கள் இன்னும் விண்ணில் செலுத்தப்படாததன் காரணமாக, தேவாஸ் மல்டிமீடியா நிறுவனம் இன்னமும் தனது செயல்பாட்டை துவக்கி, சுரண்ட ஆரம்பிக்கவில்லை. போட்டியை உருவாக்கும் வகையில் ஏல முறையையும் பின்பற்றாமல், இந்த ஒதுக்கீடுக்கென்று வகுக்கப்பட்ட வழிகாட்டு முறைகளையும் மீறி, எஸ்-பேண்ட் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு மேற்படி தனியார் நிறுவனத்திற்கு ஒதுக்கப்பட்டு இருக்கிறது.

சென்ற ஆண்டு, இதே போன்ற 15 மெகாஹெர்ட்ஸ் அலைக்கற்றையை ஏலத்தின் அடிப்படையில் 67,719 கோடி ரூபாய்க்கு மத்திய அரசு ஒதுக்கீடு செய்து இருக்கிறது. இது தான் இஸ்ரோ ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு ஒப்பந்தத்தில் 2 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டு இருக்கிறது என்று மதிப்பிடப்பட்டதற்கு அடிப்படையாக அமைந்துள்ளது.

விண்வெளி ஆராய்ச்சித் துறையின் செயல்பாடுகள் குறித்து இந்திய கணக்கு மற்றும் தணிக்கைத் துறை தனது முதனிலை தணிக்கையை துவக்கிய போது தான், பாரதப் பிரதமரின் நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் வருகின்ற முக்கியமான துறையான விண்வெளித் துறையைச் சேர்ந்த இந்த இஸ்ரோ இமாலய ஊழல் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

மேற்படி தனியார் நிறுவனத்துடனான ஒப்பந்தத்திற்கு தனது கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்து, இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் என்று கடந்த ஆண்டு ஜூலை மாதம் விண்வெளி குழு பரிந்துரை செய்தும், அந்த பரிந்துரை ஏற்கப்படவில்லை.

இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் ஆன்ட்ரிக்ஸ் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்திற்கும், தேவாஸ் மல்டிமீடியா நிறுவனத்திற்கும் இடையே ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தம் உடனடியாக ரத்து செய்யப்படுவதோடு, தனியார் நிறுவனத்திற்கு அளிக்கப்பட்ட ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு திரும்பப் பெறப்பட வேண்டும்.

மேலும், இந்திய நாட்டின் அரிதான வளங்கள் பொறுப்பற்ற முறையில் சொற்ப விலைக்கு எப்படி கொடுக்கப்பட்டது என்பதையும், இதன் மூலம் பயனடைந்தவர்கள் யார் என்பதையும் கண்டறிய முழு விசாரணை நடத்தப்பட வேண்டும்.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசினுடைய கூடாரத்திலிருந்து, பல லட்சக்கணக்கான கோடி ரூபாய் ஊழல்கள் ஒன்றன் பின் ஒன்றாக வெளிச்சத்திற்கு வந்து கொண்டிருப்பது நமது நாட்டிற்கு ஏற்பட்டுள்ள பெருத்த அவமானம்.

இது போன்ற மிகப் பெரிய ஊழல் குறித்து பொருளாதார வல்லுநரான பாரதப் பிரதமர் வாய் திறக்காமல் ஊழலுக்கு உடந்தையாக எப்படி இருக்கிறார் என்று எனக்கு புரியவில்லை!. தன்னுடைய மவுனத்தை கலைத்து உண்மையை தெரிவிக்க டாக்டர் மன்மோகன் சிங் முன்வர வேண்டும். இல்லையெனில், மத்திய அரசின் மீது மக்கள் நம்பிக்கையை இழந்து விடுவார்கள். உலக நாடுகள் முன்பு பரிகாசத்திற்கும், தலைக்குனிவிற்கும் இந்திய நாடு ஆளாகிவிடும் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+