சர்வதேச ஆட்டோமொபைல் மையமாக மாறிவரும் சென்னை-ஸ்டாலின்
சென்னை: "உலக அளவில் மிகப்பெரிய ஆட்டோமொபைல் உற்பத்தி மையம் என்ற அந்தஸ்தை சென்னை விரைவில் பெறும்,"என துணை முதல்வர் ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
ரூ.2,100 கோடி முதலீட்டில் சென்னைக்கு அருகில் அமைக்கப்பட்டுள்ள அப்போலோ நிறுவனத்தின் டயர் தொழிற்சாலையை துணை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.விழாவில் பேசிய அவர் கூறியதாவது:
"உலகின் ஆட்டோமொபைல் தலைநகரமாக சென்னை மாறி வருகிறது.தமிழகத்தி்ல் தொழிற்சாலை அமைப்பதற்கு சர்வதேச கார் உற்பத்தி நிறுவனங்கள் ஆர்வம் காட்டி வருகின்றன.இதுதொடர்பாக, சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடன் தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
தமிழகத்தில் தற்போது ஆண்டுக்கு 2.2லட்சம் வாகனங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன.இந்த உற்பத்தி வரும் ஆண்டுகளில் பன்மடங்கு உயரும்.செய்யூர் அருகே ரூ.1,800 கோடி செலவில் மஹிந்திரா நிறுவனம் எஸ்.யூ.வீ கார்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலையை அமைக்க உள்ளது.இந்த தொழிற்சாலையிலிருந்து ஆண்டுக்கு 1.5லட்சம் கார்கள் உற்பத்தி செய்யலாம்.
இதேபோன்று,இந்தோனேஷியாவை சேர்ந்த டேக்ஸ்மோ நிறுவனத்தின் ஓர் அங்கமான சுந்தரேஸ்வர் அலாய் நிறுவனம் கங்கைகொண்டானில் ரூ.1,000கோடி முதலீட்டில் டிராக்டர் தொழிற்சாலையை அமைக்க உள்ளது.இதைத்தொடர்ந்து,பல்வேறு நிறுவனங்கள் தமிழக்கத்தில் தொழிற்சாலை அமைக்க ஆர்வம் காட்டி வருகின்றன.
விரைவில் தமிழக ஆட்டோமொபைல் துறையில் ரூ4,000கோடி முதலீடு கிடைக்கும்.அனைத்து தொழிற்சாலைகளும் உற்பத்தியை துவங்கும்போது,சர்வதேச ஆட்டோமொபைல் உற்பத்தி மையமாக சென்னை மாறும்.
இதுதவிர,அப்போலோ டயர்ஸ்,ஜே.கே.டயர்,மிச்செலின் மற்றும் எம்.ஆர்.எப்.,நிறுவனங்களின் தொழிற்சாலைகள் மூலம் தமிழகத்தில் நாள் ஒன்றுக்கு 1,600 மெட்ரிக் டன் டயர் தயாரிக்கப்படுகிறது.
டெய்ம்லர்,ரினால்ட்-நிசான்,விஸ்டியோன்,மஹிந்திரா மற்றும் அசோக் லேலண்டு நிறுவனங்கள் சென்னையில் உள்ள தங்களது ஆட்டோமொபைல் துறை ஆராய்ச்சி மையங்களை மேம்படுத்தி வருகின்றன.
இதுதவிர,ரூ.500கோடி செலவில் சென்னையில் தேசிய ஆட்டோமொபைல் சோதனை ஓட்ட மையம் (நேட்ரிப்)அமைக்கப்பட்டு வருகிறது.இது வரும் செப்டம்பர் மாதம் செயல்பட துவங்கும். ஆட்டோமொபைல் துறைக்கு தேவையான அனைத்து கட்டமைப்பு வசதிகளும் தமிழகத்தில் இருக்கும்,"என்று கூறினார்.












Click it and Unblock the Notifications