தமிழக மீனவர்கள் படுகொலை: இலங்கை தூதரிடம் சுஷ்மா ஸ்வராஜ் கண்டனம்
டெல்லி: தமிழக மீனவர்களை சிங்கள ராணுவம் தொடர்ந்து படுகொலை செய்து வருவதற்கு இலங்கைத் தூதரிடம் பா.ஜ.க தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் கண்டனம் தெரிவித்தார்.
கடந்த ஒரு மாதத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 2 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் படுகொலை செய்யப்பட்டனர். இந்த சம்பவத்துக்கு மத்திய அரசு கண்டனம் தெரிவித்துள்ளது.
பாராளுமன்ற மக்களவை எதிர்க்கட்சி தலைவரும், பா.ஜனதா மூத்த தலைவருமான சுஷ்மா ஸ்வராஜ், தமிழ்நாட்டுக்கு வந்திருந்து பலியான மீனவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி நிதி உதவி வழங்கினார்.
இந்த நிலையில், இலங்கைக்கான இந்திய தூதர் பிரசாத் கரியவாசம் நேற்று டெல்லியில் உள்ள சுஷ்மா ஸ்வராஜின் வீட்டிற்குச் சென்று அவரை சந்தித்து பேசினார். அப்போது தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் படுகொலை செய்யப்படுவதற்கு கண்டனத்தையும் ஆழ்ந்த கவலையையும் வெளியிட்டார் சுஷ்மா ஸ்வராஜ். இலங்கையில் தமிழ் அகதிகளை மறுகுடியமர்த்தும் பிரச்சினை குறித்தும் அவருடன் சுஷ்மா பேச்சு நடத்தினார்.
இதுபற்றி தனது ட்விட்டர் இணையதளத்தில் சுஷ்மா இவ்வாறு கூறியுள்ளார்:
"எனது வீட்டில் இலங்கை தூதர் கரியவாசத்தை சந்தித்தபோது, இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கொல்லப்படும் பிரச்சினையை எழுப்பினேன். அதற்கு பதில் அளித்த கரியவாசம், இந்திய மீனவர்களை கொல்வதை இலங்கை அரசு ஒருபோதும் அனுமதிக்காது என்று தெரிவித்தார்.
இந்த பிரச்சினையில் எனது கவலையை இலங்கை அரசின் மேல் மட்ட தலைவர்களுக்கு எடுத்துச் சொல்வதாக அவர் உறுதி அளித்து இருக்கிறார். இந்த பிரச்சினையில் நான் தொடர்ந்து கவனம் செலுத்துவேன்''.












Click it and Unblock the Notifications